ரோஹித் - தவான் ஜோடி
இந்திய கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள் போட்டி துவக்க வீரர்கள் என்றால் சச்சின் டெண்டுல்கர் - சௌரவ் கங்குலியை கூறுவார்கள். அந்த ஜோடிக்கு அடுத்து இந்திய அணிக்கு அமைந்த சிறந்த துவக்க வீரர்கள் ஜோடி ரோஹித் சர்மா - ஷிகர் தவான் தான்.
குவித்த ரன்கள்
இருவரும் சேர்ந்து 107 ஒருநாள் போட்டிகளில் 4,802 ரன்கள் குவித்துள்ளனர். இது ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரர்கள் ஜோடியாக எடுத்த நான்காவது அதிகபட்ச ரன்கள் ஆகும். ஆனால், ஷிகர் தவானுடன் பேட்டிங் செய்வதில் உள்ள சிரமம் பற்றி கூறி உள்ளார் ரோஹித்.
கடினம்
ஷிகர் தவானை புரிந்து கொண்டு பேட்டிங் செய்வது கடினம் என அவருடன் பேட்டிங் செய்துள்ள ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் இருவருமே கூறினர். அவருக்கு என்று சில விதிகளை வைத்துக் கொண்டு அவர் பேட்டிங் செய்து வருகிறார். அது பற்றி இருவரும் கூறினர்.
முதல் பந்தை சந்திக்க மாட்டார்
ரோஹித் சர்மா கூறுகையில், "அவர் ஒரு முட்டாள். அவருக்கு முதல் பந்தை சந்திக்கவே பிடிக்காது. sஅவருக்கு சுழற் பந்துவீச்சாளர்களை சந்திக்க பிடிக்கும். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களை சந்திக்க பிடிக்காது." என தவானின் முக்கிய பிரச்சனைகளை அடுக்கினார்.
முதல் அனுபவம்
அடுத்து 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் தான் முதன் முதலில் துவக்க வீரராக பேட்டிங் செய்ய வந்த போது ஏற்பட்ட அனுபவத்தை கூறினார். அந்த தொடரில் ரோஹித் சர்மா துவக்க வீரராக தன் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்தித்தார்.
அப்போது தடுமாறினேன்
மோர்னே மோர்கல், டேல் ஸ்டெய்ன் போன்ற அசுர வேக பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்ளவது என தெரியாமல், முதலில் தவானை ஆடுமாறு கூறி உள்ளார் ரோஹித். ஆனால், தவான் மறுத்துள்ளார். வேறு வழியின்றி ஆடிய ரோஹித் சர்மா தட்டுத் தடுமாறி பவுன்சர் பந்துகளை சமாளிக்க முடியாமல் பவுல்டு அவுட் ஆனார்.
பேசுவதை கவனிக்க மாட்டார்
சாம்பியன்ஸ் ட்ராபி அனுபவத்தை கூறிய ரோஹித், அடுத்து களத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பது பற்றி கூறினார். முக்கியமான நேரத்தில் எதிரணிக்கு எதிராக திட்டம் தீட்டும் போது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது போல தலையை ஆட்டி விட்டு, இப்போது என்ன சொன்னாய்? என கேட்பார். அப்போது எரிச்சலாக இருக்கும் என்றார்.
வார்னர் அனுபவம்
அதன் பின் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஷிகர் தவானுடன் துவக்க வீரராக ஆடிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் டேவிட் வார்னர். தவானுக்கு பேட்டிங் செய்வதில் இருந்த ஒரு விசித்திர பழக்கம் பற்றி கூறினார்.
தவான் ஏற்படுத்தும் குழப்பம்
தவான் பந்தை தடுத்து ஆடி விட்டு ஒன்று அல்லது இரண்டு அடி முன்னே செல்வார். எதிரில் நிற்கும் நமக்கு அது குழப்பமாக இருக்கும். அவர் ரன் ஓடப் போகிறாரா? இல்லையா? என தெரியாது. பின்னர் பந்து கேப்பில் சென்றால் மட்டுமே நான் ரன் ஓடுவேன். அதனால் சில ரன்களை கூட நான் விட்டிருக்கிறேன் என்றார் வார்னர்.
நல்ல விஷயம்
அதே சமயம், அவரிடம் இருக்கும் நல்ல விஷயம் அவர் ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் ஓடி விடுவார். அதே போல, கடைசி பந்திலும் எப்போதும் சிங்கிள் ரன் ஓடி விடுவார் என்றார். ஆக, மொத்தத்தில் ரோஹித் சர்மா - வார்னர் இணைந்து தவானின் ரகசியங்களை பட்டியலிட்டு விட்டார்கள்.