சென்னை: சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை அறிந்ததால் சென்னை அணியை எளிதாக வீழ்த்தியதாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
ஐபிஎல் பிளேஆப் முதல் சுற்று போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்தனர். சாஹர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய மும்பை, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.
உங்களுக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கிடைக்காது..! வடிவேலு பாணியில் கோலியை கிண்டலடித்த மல்லையா
போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து ரோகித் கூறியதாவது : இது ஒரு சிறந்த போட்டி. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டோம். இந்த போட்டியில் சென்னை அணியை எங்களது சிறந்த பவுலர்கள் மூலம் 140 ரன்களுக்குள் கட்டுப் படுத்தினர். அதுவே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஜெயந்த் யாதவ் அற்புதமாக பந்துவீசினார். தோனியை இறுதி நேரத்தில் ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்துவது அவசியம் என்பது அறிந்து கச்சிதமாக செய்தோம். சென்னைக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார். மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டதால் எளிதாக ஆடி சிஎஸ்கே அணிக்கு எதிரான வென்றோம் என்றார்.