சிறப்பான ரோகித் சர்மா
ஐபிஎல் 2020 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டது. அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்தினார். அணி வீரர்கள் தொட்டதெல்லாம் துலங்கியது. ஒரு வீரர் அவுட்டானாலும் அடுத்து வருபவர் அவரைவிட சிறப்பாக செயல்பட்டார்.
5வது கோப்பை வெற்றி
இத்தகைய சிறப்புகளுக்கு தனி மனிதனாக காரணமாக இருந்தார் ரோகித் சர்மா. தான் இல்லாத போட்டிகளிலும் அணியின் சிறப்பான ஆட்டங்களுக்கு அவர் பின்னாலிருந்து உதவி புரிந்தார். இத்தகைய காரணங்களால் தற்போது அந்த அணி இந்த சீசனிலும் கோப்பையை கைப்பற்றி 5வது முறையாக கோப்பையை வென்று பெருமை படைத்துள்ளது.
பயிற்சியாளர் பாராட்
இந்நிலையில், சிறு வயதில் இருந்தே பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவரது பள்ளி பயிற்சியாளர் தினேஷ் லாட் பாராட்டு தெரிவித்துள்ளார். எப்போதுமே வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதாகவும் தோல்வி குறித்து யோசிக்க மாட்டார் என்றும் லாட் கூறியுள்ளார்.
நெருக்கடி அதிகரிக்கவில்லை
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பளிக்கப்பட்ட போது தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி தன்னுடைய கேரியரில் மேலும் சிறப்பை சேர்த்துள்ளதாகவும் லாட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரோகித்தின் பொறுப்பு
அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தினேஷ் லாட் மாறாக அவரது நெருக்கடி அதிகரிக்கவில்லை என்றும் கூறினார்.
துவங்கிய வெற்றிப் பயணம்
பள்ளி காலத்தில் ஒரு போட்டியில் 40 ரன்களில் 6 விக்கெட்டுகள் இருந்தபோது களமிறங்கிய ரோகித் சர்மா 230 ரன்களை குவித்து அணியை வெற்றியடைய வைத்ததாகவும், இடையில் தான் பதட்டமடைந்தபோது அந்தப் போட்டியை தான் வெற்றி பெற செய்வேன் என்று உறுதியளித்து அதை நிகழ்த்திக் காட்டியதாகவும் லாட் நினைவுகூர்ந்துள்ளார்.
பொறுமையாக கையாள்வார்
விராட் கோலிக்கு பதிலாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பளிக்கப்படுவது பிசிசிஐயின் முடிவு என்று கூறியுள்ள லாட், ஆனால் ரோகித்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் பொறுமையாக அந்த பொறுப்பை சிறப்பாக கையாள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.