தொடர் சாதனைகள்
இந்திய அணியின் குறைந்த ஓவர்கள் போட்டிகளின் துணை கேப்டனாகவும், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருபவர் ரோகித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 முறை கோப்பையை வென்று தந்துள்ள இவர், இந்திய அணியிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். தொடர்ந்து செய்தும் வருகிறார்.
பல்வேறு விமர்சனங்கள்
இந்நிலையில், ரோகித் சர்மா எப்போதும் போட்டிகளின்போது ரிலாக்சாக விளையாடுவதாகவும், ரன்களை எடுப்பதில் அவருக்கு சுணக்கம் காணப்படுவதாகவும் அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் அவர்மீது விமர்சனங்கள் இருந்தன. ஆனால் தன்னுடைய உடல்மொழியை மாற்றாமலேயே ரோகித் சர்மா சாதித்து காட்டியுள்ளார்.
கடின உழைப்பு இல்லை என அர்த்தமில்லை
இந்நிலையில், ரிலாக்சாக விளையாடுவதால் ஆட்டத்தில் கடின உழைப்பு போடப்படவில்லை என்று அர்த்தமில்லை என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதே கருத்தையே முன்னதாக முன்னாள் இந்திய துவக்க வீரர் வாசிம் ஜாபரும் தெரிவித்திருந்தார். பேட்டிங் செய்யும் போதும் ரன்களுக்காக ஓடும்போதும் ரோகித் ரிலாக்சாக இருப்பதாகவும் அவரிடம் கடினஉழைப்பு இல்லை என்றும் விமர்சனம் எழுவதை சுட்டிக் காட்டியுள்ள அவர், ரிலாக்சாக இருந்தாலும் அவர் கடின உழைப்பாளிதான் என்று தெரிவித்திருந்தார்.
வெற்றிப் பாதையில் மும்பை இந்தியன்ஸ்
இதனிடையே, கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய இர்பான் பதான், ரோகித் சர்மா எப்போதுமே கடின உழைப்பு மற்றும் அணியின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து பேசுவார் என்று தெரிவித்துள்ளார். இந்த மனப்பான்மையே அவர் மும்பை இந்தியன்சை வெற்றிப் பாதையில் அழைத்து செல்வதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2011 உலக கோப்பை போட்டியின்போது அவர் சரியாக விளையாடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சிறப்பான மனநிலையுடன் சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பதான் தெரிவித்துள்ளார்.