கேப்டன் விராட் கோலி
தோனிக்கு பின் டெஸ்ட் அணியிலும், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. அவர் சில பீல்டிங் நுணுக்கங்களில், அணித் தேர்வுகளில் சொதப்புகிறார் என்ற விமர்சனம் இருந்தாலும் அதைத் தாண்டி அணியை வெற்றி பெற வைத்து வருகிறார்.
வெற்றிகள்
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன், ஒருநாள் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகள் என இந்திய அணி விராட் கோலி தலைமையில் நல்ல நிலையிலேயே உள்ளது.
கோலி கேப்டன்சியில் குறை
ஆனாலும், ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற உலக அளவிலான தொடர்களில் விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு கோப்பை பெற்றுத் தரவில்லை என்ற குறை உள்ளது. அது குறித்து அவர் மீது விமர்சனமும் உள்ளது.
டி20யில் ரோஹித் சர்மா
மூன்று அணிகளுக்கும் கேப்டனாக இருப்பதால் விராட் கோலிக்கு வேலைப் பளு அதிகமாக உள்ளது. அவர் சில டி20 தொடர்களில் ஓய்வு பெறும் போது அணியை வழி நடத்திய ரோஹித் சர்மா சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் வெற்றிகள்
அது மட்டுமின்றி, ஐபிஎல் டி20 தொடரில் விராட் கோலியை விட ரோஹித் சர்மாவே சிறந்த கேப்டனாக வலம் வருகிறார். நான்கு முறை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்துள்ளார் ரோஹித் சர்மா.
2019 உலகக்கோப்பை
அப்படி இருந்தும் நீண்ட காலமாக இந்திய அணியில் கேப்டனை மாற்றுவது பற்றி பேச்சு எழாமல் இருந்தது. ஆனால், 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதிப் போட்டியுடன் வெளியேறியது. அப்போது விராட் கோலி மீது கடும் விமர்சனம் எழுந்தது.
அணியில் விரிசல்
ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே அணி தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், அணியில் விரிசல் இருந்ததாகவும் கூட அப்போது பரபரப்பாக செய்திகள் வெளியாகின. அப்போது ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
அதுல் வாசன் கருத்து
அந்த கோரிக்கை பின்னர் சில கிரிக்கெட் தொடர்களுக்கு பின் அடங்கியது. ரோஹித் - கோலி களத்தில் நட்புணர்வுடனே நடந்து கொண்டனர். இந்த நிலையில், மீண்டும் இந்திய அணியில் கேப்டனை மாற்ற வேண்டும், இரண்டு கேப்டன்கள் இருக்க வேண்டும் என விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார் முன்னாள் வீரர் அதுல் வாசன்.
தனித்தனி கேப்டன்கள்
அவர் கூறுகையில், "இந்திய அணியில் தனித்தனி கேப்டன்கள் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். காரணம், அதிக சுமை உள்ளது. விராட் கோலி மூன்று வித கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்க விரும்புகிறார். ஆனால், ரோஹித் சர்மா உள்ளுணர்வு மூலம் சிறந்த தலைவராக இருக்க முடியும் என காட்டி உள்ளார்" என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி
மேலும், :டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தான் பாஸ். ஒருநாள் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்க வேண்டும். ஆனால், விராட் கோலியின் சுமையை குறைக்க டி20யில் ரோஹித் சர்மா போன்ற ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம்" என்றார் அதுல் வாசன்.