ஆட்ட நாயகன் விருது
இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா (101) மற்றும் சுப்மன் கில் (112) என இருவருமே சதம் அடித்தனர். ஆனால் அவர்களை தவிர்த்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியாவுக்கு தோல்வி பயத்தை காட்டிய முக்கியமான பார்ட்னர்ஷிப்களை உடைத்து ஷர்துல் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
கடுப்பான ரோகித் சர்மா
இந்நிலையில் ஷர்துலின் பந்துவீச்சுக்கு பின்னால் ரோகித் சர்மாவின் கடுமையான கோபம் இருந்துள்ளது. டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் மிடில் ஆர்டரில் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அப்போது அவர்களை பிரிக்க ஷர்துல் கொண்டு வரப்பட்டார். பவுன்சர் பந்தின் மூலம் மிட்செல் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்திலேயே டாம் லேதமும் ஷர்துலிடம் சிக்கி வெளியேறினார்.
என்ன காரணம்
2 விக்கெட்களால் உற்சாகமான அவர், அடுத்த 2 பந்துகளையும் தொடர்ச்சியாக பவுன்சர்களாக வீசினார். இதனை நன்கு அறிந்திருந்த டெவோன் கான்வே சுலபமாக பவுண்டரிகளை அடித்து தள்ளினார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா, ஒரே மாதிரி பந்தை போடுவியா? இதுக்கூடவா தெரியாது, 2 பவுண்டரிகள் சென்றுவிட்டது என மிகவும் கோபமாக மைதானத்திலேயே கத்தினார்.
அடுத்த ஓவரே கூல்
எனினும் அடுத்த ஓவரிலேயே க்ளென் பிலிப்ஸின் விக்கெட்டை எடுத்து ரோகித்தை நிதானமாக்கினார் ஷர்துல். மொத்தமாக 6 ஓவர்களை வீசிய அவர் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அவர் எடுத்த 3 விக்கெட்களுமே மிகப்பெரிய திருப்புமுனையை தந்தது. இதனால் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.