அருமையான ஆண்டு
2019ம் ஆண்டு ரோஹித்துக்கு மறக்க முடியாது ஆண்டாகும். காரணம், அந்த ஆண்டில் அவர் பல அதிரடிகளை நிகழ்த்திக் காட்டினார். அந்த வகையில் ரோஹித்தைப் பொறுத்தவரை 2019ம் ஆண்டு அவருக்கு ஒரு பொன்னான ஆண்டு என்று கூட சொல்லலாம். அந்த சாதனைகள் நிச்சயம் அவருக்கு நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
உலகக் கோப்பையில் கலக்கல்
2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் அதகளம் செய்து விட்டார். அதை எப்படி மறக்க முடியும். ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இணைந்து நடத்திய இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கோப்பை வெல்லவில்லை. ஆனால் ரோஹித் சர்மா மக்கள் மனதைக் கொள்ளையடித்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர்தான். மொத்தம் 9 இன்னிங்ஸ்களில் 648 ரன்களைக் குவித்தார் ரோஹித் சர்மா.
5 சதங்கள்
அதேபோல இதே உலகக் கோப்பைத் தொடரில் அதிக சதம் போட்டவரும் இவர்தான். அதாவது மொத்தம் 5 சதங்களைப் போட்டார் ரோஹித் சர்மா. 2வது இடத்தைப் பிடித்தவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். அவர் போட்டது 3 சதம்தான். இந்த சாதனை ரோஹித்தை கடந்த ஆண்டு அதிகம் பேச வைத்த முக்கிய சாதனையாகும். ரோஹித்தின் பேட்டிங் சராசரியும் 98 சதவீதமாக பெஸ்ட்டாக இருந்தது.
இமாலய சிக்ஸர்கள்
கடந்த ஆண்டு 75 சிக்ஸர்களை விளாசி அந்த சாதனையைச் செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் படைத்தார் ரோஹித் சர்மா. இதில் உலகக் கோப்பைப் போட்டியில் மட்டும் அவர் 15 சிக்ஸர்களை விளாசியிருந்தார் என்பது முக்கியமானது. இதுவும் ரோஹித்தின் கடந்த ஆண்டு சாதனையில் முக்கியமானது. அவருக்கு மறக்க முடியாத சிக்ஸர் ஆண்டாகவும் இது அமைந்தது.
டெஸ்ட்டில் அசத்தல்
இன்னொரு தரமான சம்பவத்தையும் கடந்த ஆண்டுதான் செய்தார் ரோஹித் சர்மா. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கடந்த ஆண்டு 400 மற்றும் அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரராக உருவெடுத்தார். அது மட்டுமா.. கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது தொடக்க ஆட்டக்காரராக அவர் அடுத்தடுத்து இரு சதம் விளாசி அப்படிச் செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றார். அதே தொடரில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை வைத்திருந்த சிம்ரோன் ஹேட்மேயரின் சாதனையையும் முறியடித்தார்