இந்திய அணி பேட்டிங்
238 என்ற கடினமான இலக்கையும் தென்னாப்பிரிக்கா விரட்டிய சூழலில், பேட்டிங்கால் மட்டுமே இந்தியா தப்பியது. குறிப்பாக சூர்யகுமாரின் பேட்டிங் தான். இந்தியா 107 - 2 என்ற நிலையில் இருந்தபோது கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களை விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கோலி 49 ரன்களை குவிக்க, இந்த ஜோடி 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ரோகித் சர்மா அறிவிப்பு
இந்நிலையில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் குறித்து ரோகித் சர்மா முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சூர்யகுமார் யாதவை இனி விளையாடவைக்க வேண்டாம் என யோசித்து வருகிறேன். அடுத்து வரும் எந்த போட்டிகளிலும் அவரை விளையாட வைக்காமல் நேரடியாக அக். 23ம் தேதி டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரை இதே போன்று மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் எனக் கூறினார்.
சூர்யகுமார் விளக்கம்
இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம் என்றவுடனே திட்டமிட்டுவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். பயிற்சியின் போதே எப்படி ஆடப்போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும். முதலில் பேட்டிங் செய்யும் போது முடிந்தவரை அடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் எனது திட்டம் எனக் கூறினார்.
இந்தியாவின் அடுத்த போட்டிகள்
இந்திய அணி அடுத்ததாக வரும் அக்டோபர் 4ம் தேதி தென்னாப்பிரிக்காவுடனான 3வது டி20ல் மோதுகிறது. இதனை தொடர்ந்து 6ம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் ரோகித் படை, அங்கு அக். 17 மற்றும் 19ம் தேதிகளில் ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.