பல சம்பவங்கள்
ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்த அந்தப் போட்டியில் இலங்கை அணி செய்த ஒரு பெரிய சொதப்பல், ரோஹித் சர்மாவை பார்த்து விராட் கோலி முறைத்தது, ரோஹித் அடித்த ஸ்கோரை கூட இலங்கை அணியால் கடக்க முடியாமல் போனது என பல சம்பவங்கள் நடந்தன.
இரட்டை சதம்
சச்சின், சேவாக் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் கடந்தி இருந்த நிலையில், ரோஹித் சர்மா 2013ஆம் வருடம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் குவித்து இரட்டை சதம் கடந்து இருந்தார்.
கேட்ச் கொடுத்தார்
இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அதை விட சிறப்பான இரட்டை சதம் அடித்தார் ரோஹித். ஆனால், இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்கள் எடுத்து இருந்த போது அவர் எளிதான கேட்ச் கொடுத்தார்.
கேட்ச் நழுவியது
அந்த கேட்ச்சை நழுவ விட்டார் இலங்கை அணியின் திசாரா பெரேரா. கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய [பாதிப்பை ஏற்படுத்திய கேட்ச் நழுவல் அது தான். 4 ரன்னில் தப்பித்த ரோஹித் சர்மா, அதன் பின் வெறியாட்டம் ஆடி விட்டு கடைசி பந்தில் தான் ஆட்டமிழந்தார்.
ரோஹித் சதம்
ரஹானே 28, ராயுடு 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின் கோலியுடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தார் ரோஹித் சர்மா. சரியாக 100 பந்துகளில் சதம் கடந்தார் அவர்.
கோலி முறைப்பு
கோலி 66 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித் சர்மாவுடன் ரன் ஓடுவதில் ஏற்பட்ட குளறுபடியால் ரன் அவுட் ஆனார். அப்போது ரோஹித் சர்மா மீது ஏமாற்றம் அடைந்த கோலி, அவரை முறைத்துக் கொண்டே களத்தை விட்டு வெளியேறினார்.
கடைசி பத்து ஓவர்கள்
ஆனால், கோலிக்கும் சேர்த்து வைத்து விளாசித் தள்ளினார் ரோஹித். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 129 ரன்கள் குவித்தது. அதில் 110 ரன்கள் ரோஹித் சர்மா அடித்தது என்பது வியப்பான தகவல்.
அதிகபட்ச ஸ்கோர்
ரோஹித் சர்மா 33 ஃபோர், 9 சிக்ஸ் அடித்து 173 பந்துகளில் 264 ரன்கள் குவித்தார். அதுவே இன்று வரை ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்தியா அந்தப் போட்டியில் 404 ரன்கள் குவித்தது.
இலங்கை படுதோல்வி
அடுத்து ஆடிய இலங்கை அணியால் ரோஹித் சர்மாவின் ஸ்கோரான 264 ரன்களை தாண்ட முடியவில்லை. 251 ரன்கள் எடுத்த அந்த அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.
250 ரன்கள் சாதனை
ரோஹித் சர்மா தவிர வேறு எந்த வீரரும் ஒருநாள் போட்டியில் 250 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோஹித் மட்டுமே.