ரோஹித் காயம்
ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு முன் இடது காலில் காயம் அடைந்தார் அவருக்கு தசைபிடிப்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் அதிக வலியில் இருந்ததாக மட்டுமே செய்தி வெளியானது.
இரு போட்டிகளில் ஆடவில்லை
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும், அதற்கு அடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியிலும் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவர் விரைவில் போட்டிகளில் பங்கேற்பார், தற்சமயம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என மும்பை அணி கூறி வந்தது.
இந்திய அணியில் நீக்கம்
இந்த நிலையில், ஆஸ்திரேலியா செல்லும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது பிசிசிஐ. இதில் ரோஹித் சர்மா பெயர் மூன்று அணிகளிலும் இடம் பெறவில்லை. அவர் காயம் காரணமாக அணியில் தேர்வு செய்யவில்லை என பிசிசிஐ கூறி இருந்தது.
வதந்தி
இதற்கிடையே, ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது மும்பை இந்தியன்ஸ். அப்படியே இந்திய அணியில் ரோஹித் சர்மா ஏன் புறக்கணிக்கப்பட்டார்? என்ற கேள்வியையும் தூண்டி விட்டது அந்த அணி.
மும்பை வெளியிட்ட புகைப்படம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சி செய்யும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர், ஜனவரியில் ஆடப் போகும் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். ஆனால், அடுத்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அவர் தயாராகி வருகிறார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த காட்சி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பயிற்சி செய்து கொண்டிருக்கும் வீரரை காயம் என குறிப்பிட்டு பிசிசிஐ எப்படி நீக்கலாம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரோஹித் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா என்பதும் தெரியவில்லை.
திட்டமிட்டு நீக்கமா?
பெரிய காயம் இல்லை என்றால் ஏன் ரோஹித் சர்மாவை நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர், ஜனவரியில் நடைபெற உள்ள தொடர்களில் இருந்து நீக்க வேண்டும்? அவரை பிசிசிஐ திட்டமிட்டே அணியில் இருந்து நீக்கி உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
துணை கேப்டன் அறிவிப்பு
இதில் மற்றொரு முக்கியமான விஷயம், ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பவே மாட்டார் என்பதை முடிவு செய்து ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான துணை கேப்டனாக கேஎல் ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோலி - ரோஹித்
அணியில் நீக்கம், அடுத்த துணை கேப்டன் அறிவிப்பு என பிசிசிஐ செய்யும் விஷயங்கள் கேப்டன் கோலி - ரோஹித் சர்மா இடையே விரிசல் இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ரோஹித் விவகாரம் குறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் கோரிக்கை.