தோனி விலகல்
கடந்த 2015 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின், தொடர்ந்து இந்திய அணி விமர்சனத்தை சந்தித்து வந்தது. 2017இல் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
உலகக்கோப்பை ஏமாற்றம்
அப்போது 2019 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் நியமித்தது பிசிசிஐ. ஆனால், இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதியுடன் திரும்பி உள்ளது. இதனால், பிசிசிஐ ஏமாற்றத்தில் உள்ளது.
கேப்டன் மாற்றம்
ஆக்ரோஷமாக இருக்கும் விராட் கோலியை டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக நியமித்து, ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என பல அணிகளிலும் டெஸ்ட் - ஒருநாள் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ தகவல்
பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரோஹித் சர்மா 50 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ள இதுதான் சரியான நேரம். அடுத்த உலகக்கோப்பைக்கு திட்டமிட நேரம் வந்துவிட்டது. ஏற்கனவே, செய்து வைத்துள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, புதிய பார்வை தேவை. ரோஹித் சர்மா தான் அந்த வேலைக்கு சரியான நபர்" என்றார்.
பரவும் வதந்தி
உலகக்கோப்பை தொடர் முடிந்த இரு தினங்களில் இந்திய அணியில் கோலி - ரோஹித் தலைமையில் இரு குழுக்கள் செயல்படுவதாக வதந்தி ஒன்று வேகமாக பரவத் தொடங்கியது. அது உண்மையா என பலரும் விவாதித்து வரும் நிலையில், ரோஹித் சர்மாவை கேப்டனாக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது.
என்ன நடக்கும்?
பிசிசிஐ கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் உலகக்கோப்பை செயல்பாடுகளுடன், கோலி - ரோஹித் சர்மா இடையே உள்ள விரிசல் குறித்தும் பேசப்படலாம் என்று கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரோஹித் சர்மா தான் கேப்டன் எனும் நிலையில், அதில் அவர் சிறப்பாக அணியை வழிநடத்திச் சென்றால், அவரை நிரந்தர கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.