3வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை துவங்கி நடைபெறவுள்ளது. முன்னதாக விளையாடப்பட்டுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
துணை கேப்டன் ரோகித்
முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு தனது குழந்தை பிறப்பிற்கென நாடு திரும்பியுள்ள விராட் கோலிக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே அடுத்த 3 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிலையில் இறுதி இரண்டு போட்டிகளில் துணை கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றுள்ளார்.
துவக்க வீரர் ரோகித்
ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்குவாரா அல்லது மிடில் ஆர்டரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடப்படவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிறப்பான ஆட்டம்
நெட் பயிற்சிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இதையடுத்து அவர் 3வது போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்றும் இந்திய அணி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. மயங்க் அகர்வால் இந்த போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் சுப்மன் கில் ரோகித்துடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித்தால் வலிமை
கடந்த இரண்டாவது போட்டியில் இளம் வீரர்கள் மற்றும் சில மூத்த வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து அணியின் அபாரமான வெற்றிக்கு காரணமாக இருந்தனர். இந்நிலையில் அணியில் ரோகித் சர்மா இணைந்துள்ளது அணியின் வலிமையை மேலும் கூட்டியுள்ளது.