நியூசி., ரன்கள்
முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
மாறி மாறி தாக்குதல்
இந்நிலையில், நேற்று (ஜூன் 21) நான்காவது நாள் ஆட்டம் முழுவதுமாக மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், இதில் இந்திய பவுலர்கள் மிகச் சிறப்பாக வீசி வருகின்றனர். பேஸ், பவுன்ஸ், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திணறும் நியூஸி.,
குறிப்பாக, ஷமி வீசிய ஓவர் பிரமாதம் எனலாம். அவர் வீசிய முதல் ஓவரில் 2 பந்துகள், வில்லியம்சனின் கையை பதம் பார்த்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பந்து எங்கு பிட்ச் ஆகிறது, எங்கு வெளியே செல்கிறது என்பதை கூட கெஸ் பண்ண முடியாமல் வீரர்கள் திணறினர். இந்த நிலையில் தான் அந்த முக்கிய விக்கெட்டை இழந்திருக்கிறது நியூசிலாந்து அணி.
ஜஸ்ட் 11 ரன்கள்
ஆம்!. ராஸ் டெய்லர் காலி. ஷமி வீசிய அட்டகாசமான பந்தில் லீடிங் எட்ஜ் ஆன பந்தை, ஷாட் கவரில் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த ஷுப்மன் கில், பந்தை மிக அபாரமாக டைவ் செய்து கேட்ச்சாக்கினார். உண்மையில், இந்த விக்கெட்டை பார்க்க அப்படி இருந்தது. சீனியர் வீரரான ராஸ் டெய்லரால் அந்த பந்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அந்த புயல் பந்தை அவர் கவர் டிரைவ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், ஷுப்மனின் அபார கேட்ச்சால் அவர் 37 பந்துகளில் 11 ரன்களுடன் வெளியேற நேரிட்டது.