ராஸ் டெய்லர் சுயசரிதை
ஓய்வுக்கு பின்னர் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்ட ராஸ் டெய்லர், அதில் நிறவெறி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளை நிற மக்களுக்கானதாக உள்ளது. அணியில் நான் மட்டும் மாநிறமாக இருந்தேன். இதனால் பலமுறை ஓய்வு அறையில் நிறத்தை வைத்து சக வீரர்களே விமர்சித்துள்ளனர். மிகவும் கொடுமையானது அது எனக்கூறியிருந்தார்.
2வது சர்ச்சை
ராஸ் டெய்லரின் இந்த நிறவெறி குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்து இந்திய கிரிக்கெட்டிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதாவது ஐபிஎல் அணி உரிமையாளர் ஒருவர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக கூறியுள்ளார்.
என்ன பிரச்சினை
இதுகுறித்து பேசிய அவர், ராஜஸ்தான் அணிக்காக நான் விளையாடிய போது, ஒருமுறை பஞ்சாப் அணி 195 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அந்த போட்டியில் நான் ஒரு ரன் கூட அடிக்காமல் எல்.பி.டபள்யூ ஆனேன். ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. எனினும் சகஜமாக அன்றைய இரவு ஷேன் வார்னே உள்ளிட்ட வீரர்கள் ஹோட்டலில் மது அருந்த சென்றோம்.
அறையப்பட்டேன்
அப்போது ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள் என்னிடம், " டக் அவுட் ஆவதற்காக உங்களை பல கோடி கொடுத்து வாங்கவில்லை ராஸ்" எனக்கூறி எனது கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து 3 -4 முறை என்னை அறைந்தனர். மிகவும் ஓங்கி அறையவில்லை. ஆனால் அவர்கள் விளையாடவில்லை, வேண்டுமென்றே கோபத்தில் அடிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். மற்றவர்கள் முன்பு சிரித்து சமாளித்துவிட்டனர்.
அடுத்து என்ன நடந்தது
அந்த ஒரு சூழலில் அதனை பெரிதுப்படுத்தி பிரச்சினையை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை. ஆனால் இதே போன்ற நிலைமை தான் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் நடந்துக்கொண்டிருக்கிறது என்பது தான் மனதிற்கு வலிக்கிறது. அதனை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது என ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.