ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளார். இத்தகைய முன்னணி வீரர்கள் இருந்தபோதிலும் கடந்த 2008 முதல் அந்த அணி இதுவரை கோப்பையை வெற்றி கொள்ளவில்லை. வலிமையான அணியாக கருதப்படும் இந்த அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
ஆர்சிபியில் பல்வேறு மாற்றங்கள்
இந்நிலையில் அடுத்த மாதம் 29ம் தேதி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஐபிஎல் அணிகள் பல வீரர்களை வாங்கியுள்ளன. இந்நிலையில் ஆர்சிபி இருதினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அணியின் இயக்குநராக சர்வதேச அளவில் சிறந்த பயிற்சியாளராக கருதப்படும் மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி கோபம்
ஆர்சிபி சமூக வலைதளத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த மாற்றங்கள் குறித்து தனக்கும் அறிவிக்கப்படவில்லை என்று அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தன்னிடம் கேட்கும்படியும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
|
புதிய பத்தாண்டு...புதிய ஆர்சிபி...புதிய லோகோ
கடந்த இரு தினங்களாக ஆர்சிபி வலைபக்கங்களில் லோகோ உள்ளிட்டவை அகற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய லோகோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது ஆர்சிபி. மேலும் புதிய புத்தாண்டு, புதிய ஆர்சிபி, புதிய லோகோ என்றும் திறமையுடன் விளையாடுங்கள் என்று தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளது. இதுகுறித்த வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.
|
துவக்க வீரர்களின் புகைப்படங்கள் வெளியீடு
இந்த புதிய லோகோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே லோகோ சிறப்பாக உள்ளதாக பாராட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இந்த சீசனில் ஆரஞ்ச் ஆர்மி சிறப்பாக விளையாட தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது துவக்க ஆட்டக்காரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவின் புகைப்படங்களை வெளியிட்டது.
ஆர்சிபி தலைவர் கருத்து
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த மாற்றம் தேவைப்பட்டதாகவும் இதன்மூலம் திறமை மற்றும் வலிமையாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிக்க ஆயத்தமாக தனது அணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆர்சிபி அணியின் தலைவர் சஞ்சீவ் சூரிவாலா தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி வெற்றி இலக்கு
இயக்குநர், லோகோ உள்ளிட்ட மாற்றங்களுடன் களமிறங்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த ஆண்டில் வெற்றியை இலக்காக கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் விராட் கோலி உள்ளிட்ட அணியின் வீரர்களும் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.