நான்காவது போட்டி
2020 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வலுவான அணியாக இந்தப் போட்டியில் களமிறங்கியது.
ராஜஸ்தான் பலவீனம்
ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு போட்டியில் கூட ஆடாத நிலையில் அந்த அணி பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவின. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் இல்லாததால் அந்த அணி பலவீனமான அணி போல காட்சி அளித்தது.
சஞ்சு சாம்சன் அதிரடி
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கூட்டணி அமைத்து ஆடினர். சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணியை துவம்சம் செய்து 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி
ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகம் எடுத்து 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன் குவித்து வந்த போது தோனி யாரை பந்து வீச வைப்பது என புரியாமல் தவித்து வந்தார்.
தோனி செய்த சொதப்பல்
முதல் போட்டி போலவே இந்தப் போட்டியிலும் தோனி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்தார். ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ் இருந்தாலும் அவர்கள் நீண்ட காலமாக பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்சன் எங்கே?
சாம்சன் சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கிய போது தோனி மீண்டும் மீண்டும் ஜடேஜா, பியுஷ் சாவ்லாவையே பயன்படுத்தினார். ஷேன் வாட்சனை ஒரு ஓவராவது பயன்படுத்தி பார்த்து இருக்கலாம்.எனினும், தோனி அதை செய்யவில்லை.
கடைசி ஓவர் சொதப்பல்
ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடித்து வந்த ராஜஸ்தான் அணி சாம்சன், ஸ்மித் விக்கெட்டுக்கு பின் லேசாக சரிந்து இருந்தது. ஆனால், கடைசி ஓவரில் நிகிடி சொதப்பலாக நோ பால், வைடு என வீச, ஜோப்ரா ஆர்ச்சர் அந்த ஓவரில் 4 சிக்ஸ் அடிக்க ராஜஸ்தான் அணி பெரிய ஸ்கோரை எட்டியது.
ராஜஸ்தான் மிரட்டல்
20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. தோனி ஒருவேளை கூடுதல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருந்தால் போட்டி லேசாக திசை மாறி இருக்கலாம். அடுத்த போட்டியில் தோனி கூடுதல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவார் என நம்பலாம்.