வயதான அணி
சிஎஸ்கே அணியை வயதான அணி என விமர்சனம் செய்பவர்கள் எண்ணிக்கை இந்த சீசனில் கொஞ்சம் அதிகம் தான். காரணம், கடந்த இரண்டு சீசனுக்கு முன் நடந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 30 வயதை கடந்த பல வீரர்களை வாங்கியது. அவ அவர்களுக்கு தற்போது மேலும் வயதாகி விட்டதால் விமர்சனங்கள் அதிகரித்தது.
இளம் வீரர்களே இல்லை
சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களே இல்லை. அந்த அணி ஐபிஎல் கோப்பை பற்றியெல்லாம் யோசிக்கவே கூடாது என முன்னாள் வீரர்கள் கூறி வரும் நிலையில், முதல் போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தெறிக்கவிட்டது சிஎஸ்கே. வழக்கம் போல தோனி தன் முடிவுகளால் அனைவரையும் திகைக்க வைத்தார்.
முதல் போட்டி மாற்றம்
பிராவோ இல்லாத நிலையில், சாம் கர்ரனை அணியில் தேர்வு செய்தார். எப்போதும் கூடுதல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் அவர், இந்த முறை சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்தார். அதே போல, தன் பேட்டிங் வரிசையில் ஜடேஜா, சாம் கர்ரனை இறக்கி அவுட் ஆனாலும் பரவாயில்லை, அடித்து ஆடுங்கள் என கூறி மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
வீழ்ந்த மும்பை
சிஎஸ்கே அணி வீரர்களை குறைத்து மதிப்பிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல வீரர்களை கொண்டும் தோல்வி அடைந்தது. தோனியின் கேப்டன்சி மிக சிறப்பாக அமைந்தது இதற்கு முக்கிய காரணம். அம்பதி ராயுடு அப்படி ஒரு அதிரடி ஆட்டம் ஆடுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
நீண்ட பேட்டிங் வரிசை
முதல் போட்டியில் களமிறங்கிய அணியில் பத்து பேட்ஸ்மேன்கள் இருந்தனர். ஆம், முரளி விஜய், ஷேன் வாட்சன் முதல் தோனி, கேதர் ஜாதவ் வரை மட்டுமே பேட்ஸ்மேன்கள் என்றாலும், தீபக் சாஹர் மற்றும் பியுஷ் சாவ்லாவும் பேட்டிங்கில் ஓரளவு ரன் குவிக்கும் திறன் கொண்டவர்கள்.
தோனியின் திட்டம்
அதனால், தான் ஜடேஜா, சாம் கர்ரனை முன்னே இறக்கி விட்டு விக்கெட் பற்றி கவலையின்றி ஆடுமாறு கூறினார் தோனி. இது தான் இந்த சீசனில் தோனியின் திட்டம் நீண்ட பேட்டிங் வரிசையை வைத்துத் தான் எதிரணிகளை திக்குமுக்காட வைக்கப் போகிறது சிஎஸ்கே.
இது முதல்படி தான்
முதல் போட்டியில் இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைக்காததும் கூட இந்த புதிய திட்டத்தால் இருக்கலாம். இது வெறும் முதல்படி தான். சிஎஸ்கே அணியில் இன்னும் இரண்டு ஆல் - ரவுண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வந்தால் பந்துவீச்சிலும் சிஎஸ்கே அணி கூடுதல் பலத்தை பெறும்.
அந்த 2 வீரர்கள்
அந்த இரண்டு ஆல் - ரவுண்டர்கள் பிராவோ மற்றும் மிட்செல் சான்ட்னர். போட்டிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அப்போது அணியின் சம நிலை இன்னும் சிறப்பாக இருக்கும். தோனியின் இந்த புதிய திட்டம் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது மற்ற அணிகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காணாமல் போன விமர்சனங்கள்
முதல் போட்டிக்கு முன் இருந்த வயதான அணி என்ற விமர்சனம் அம்பதி ராயுடு அடித்த அடியில் காணாமலேயே போனது. அதிலும் உச்சகட்டமாக அம்பதி ராயுடுவை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது தான் உச்சகட்டம். அப்படி கோரிக்கை எழுப்ப வைத்தது தான் சிஎஸ்கேவின் உண்மையான வெற்றி!