அதிரடி துவக்கம்
ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 140 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரைன் அதிரடி துவக்கம் அளித்தனர்.
2வது ஓவர்
இவர்கள் பேட்டிங் செய்த போது, இரண்டாவது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் கௌதமை பந்துவீச அழைத்தார் ரஹானே. அந்த ஓவர் முழுவதும் தானே பேட்டிங் செய்த சுனில் நரைன், 4 ஃபோர், 1 சிக்ஸ் என அதிரடியாக அடித்து ஆடினார். அந்த ஓவரில் மட்டும் கொல்கத்தா அணிக்கு 22 ரன்கள் கிடைத்தது.
சுனில் நரைனின் பலம்
சுழற் பந்துவீச்சாளரான சுனில் நரைனை துவக்க வீரராக களமிறக்கி "விக்கெட் போனாலும், பரவாயில்லை. அடித்து ஆட வேண்டும்" என கூறியுள்ளது கொல்கத்தா அணி நிர்வாகம். அதற்கேற்ப அவரும் கடந்த ஐபிஎல் தொடர் முதல் இப்போது வரை அதிரடி காட்டி வருகிறார். நரைனின் பலம் சுழற் பந்துவீச்சை எளிதாக அடித்து ஆடுவதுதான்.
பலியாடு கெளதம்
இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே என்ன நினைத்தாரோ, சுழற்பந்துவீச்சாளர் கெளதமை பலியாடாக சுனில் நரைனுக்கு அர்ப்பணித்தார். நரைனும், கரும்பு தின்னக் கூலியா என அடித்து துவைத்து விட்டார்.
கொல்கத்தா வெற்றி
ரசிகர்கள் பலரும் ரஹானே செய்த இந்த அடிப்படை தவறை சுட்டிக் காட்டி கலாய்த்து வருகிறார்கள். சுனில் நரைன் இந்தப் போட்டியில் 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 14 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.