ஜோஸ் பட்லர் அதிரடி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 184 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி வந்தார். 12 ஓவர்கள் வரை 1 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப் அணி.
போட்டியில் திருப்புமுனை
பட்லரை ஆட்டமிழக்கச் செய்தால் மட்டுமே, போட்டியில் திருப்புமுனை ஏற்படும் என்ற சூழலில், பட்லர் பந்துவீச்சாளர் முனையில் நின்று இருந்தார். அஸ்வின் பந்து வீசும் முன் கிரீஸை விட்டு அவர் ஒரு அடி முன்னே செல்ல, அஸ்வின் அவரை ரன் அவுட் செய்தார்.
விதிப்படி அவுட்
கிரிக்கெட்டில் எதிர்முனை பேட்ஸ்மேன் இது போல பந்து வீசும் முன் கிரீஸை விட்டு முன்னேறிச் சென்றால் முதல் முறை எச்சரிக்கை கொடுப்பதே வழக்கம். எனினும், எச்சரிக்காமல் ரன் அவுட் செய்தால் அது விதிப்படி அவுட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறை எச்சரிக்கை
எனினும், பெரும்பாலான வீரர்கள் முதல் முறை எச்சரிக்கை மட்டுமே செய்வர். இரண்டாவது முறையும் கிரீஸை விட்டுச் சென்றால் சிலர் ரன் அவுட் செய்வர். ஆனால், அஸ்வின் எச்சரிக்கை எதுவும் செய்யாமலேயே ரன் அவுட் செய்தது சர்ச்சையாக மாறி உள்ளது.
கைஃப் சொன்னது
இதை பலரும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் வீரர் கைஃப், அஸ்வின் ஏற்கனவே சர்வதேச போட்டி ஒன்றில் இது போல அவுட் செய்துவிட்டு அவுட் கேட்டார். அந்த போட்டியின் கேப்டன் சேவாக் அதை தடுத்து நிறுத்தினார். அம்பயரிடம் அப்பீல் கேட்கவில்லை என கூறிவிட்டார் என சுட்டிக் காட்டியுள்ளார். 2012இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இவ்வாறு நடந்து கொண்டதை தான் கூறுகிறார் கைஃப்.
ரசிகர்கள் வாதம்
அஸ்வின் விவகாரத்தில் பெரும்பாலானோர், அஸ்வின் திட்டமிட்டு மெதுவாக ஓடி வந்து, பட்லர் கிரீஸை விட்டு வெளியேறும் வரை காத்திருந்து ரன் அவுட் செய்தார் என கூறி வருகின்றனர். சிலர் அஸ்வின் செய்தது சரி என கூறி வருகின்றனர்.