தொடக்கம் அதிர்ச்சி
இந்த தொடரில் உச்சகட்ட பார்மில் இருக்கும் பாஃப் டூப்ளசிஸ் போல்ட் ஓவரில் மிலனேவிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலியும் வந்த வேகத்தில் ரன் கணக்கை தொடங்காமல் நடையை காட்டினார். அணியை மீட்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கிய சுரேஷ் ரெய்னாவும் தேவையில்லாமல் போல்ட் ஓவரில் ஷாட் அடித்து 4 ரன்னுக்கு அவுட்டானார். பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் களத்துக்கு வந்த தல தோனியும் மிலனே ஷாட் பிட்ச் பந்து வீச்சுக்கு இரையானார்.
ருத்ராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து பரிதவித்தது. ஒருபக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுபுறம் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருக்கு ஜடேஜாவும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். சென்னை அணி ஒரு கட்டத்தில் 100 ரன்களை தாண்டுமா என்று பலர் நினைத்து இருந்த நிலையில் ஜடேஜாவும், கெய்க்வாட்டும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருத்ராஜ் கெய்க்வாட் அற்புதமான இன்னிங்ஸ் ஆடி 58 பந்துகளில் 88 ரன்களுடன் இழக்காமல் இருக்க சென்னை அணி 156 என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.
மும்பை தோல்வி
157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்திலேய பலமாக அடி வாங்கியது. டிக்காக் 17 ரன்கள், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, நம்பிக்கை நட்சத்திரங்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் அவர்கள் பின்னால் பெவிலியனுக்கு திரும்ப மோசமான நிலையை சந்தித்தது மும்பை இந்தியன்ஸ். மும்பை அணியின் தூணாக கருதப்படும் கெயிரன் பொல்லார்ட்டும் 18 ரன்னுடன் வெளியேற மும்பை இறுதிவரை மீளவே இல்லை. சௌரப் திவாரி போராடி 50 ரன்கள் ஏதும் பலன் இல்லை. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 136 ரன்களை மட்டுமே எடுத்ததால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிக ஸ்கோர்
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சி.எஸ்.கே வெற்றி குறித்து பரிசளிப்பு விழாவில் கேப்டன் தோனி கூறியதாவது:- 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள்தான் சேர்த்திருந்தபோது 140 ரன்கள் வந்தால் போதும் என்று நினைத்து இருந்தோம். ஆனால், அதன்பின் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ஸ்கோர் கிடைத்துள்ளது. ருத்ராஜ் கெய்க்வாட், பிராவோ சிறப்பான ஆட்டத்தில் ஸ்கோர் 160 ரன்களுக்கு கொண்டு வந்து விட்டனர்.
பிட்ச்சின் தன்மை
இந்த பிட்ச் இரண்டு தன்மையில் இருந்தது. முதலில் ரொம்ப ஸ்லோவாக இருந்தது. இதனால் விரைவில் விக்கெட்டுகள் வீழ்ந்தோம். இந்த பிட்சில் ஒரு பேட்ஸ்மேன் தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டம் முடிவு வரை இருப்பது உணர்வுப்பூர்வமானது; முக்கியமானது. ராயுடு காயமடைந்து சென்றதால் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர் அடுத்த போட்டிக்குள் குணமடைந்து விடுவார். இவ்வாறு தோனி கூறினார்.