ருதுராஜ் அதிரடி
அதன்படி இன்றைய நாளின் 2வது காலிறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் மெகா சாதனை படைத்தார். ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி அசத்தியதோடு, 159 பந்துகளில் 220 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஹங்கர்கேக்கர் அசத்தல்
ருதுராஜ் கெயிக்வாட்டின் அதிரடியான ஆட்டத்தால், மகாராஷ்டிரா அணி 330 ரன்கள் குவித்தது. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் மகாராஷ்டிரா அணியின் ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால் உத்தரப் பிரதேச அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி வீழ்த்தியது.
ஆட்டநாயகன் விருது
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் தனது விருதை ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கருக்கு ருதுராஜ் கெயிக்வாட் வழங்கினார். இது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
கம்பீர் செய்த செயல்
இதேபோல் 2009ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கவுதம் கம்பீர் 150 ரன்கள் விளாசினார். இதேபோட்டியில் விராட் கோலி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 150 ரன்கள் விளாசியதற்காக ஆட்டநாயகன் விருது கம்பீருக்கு வழங்கப்பட்ட நிலையில், அதனை விராட் கோலிக்கு வழங்கி கம்பீர் ஆச்சரியம் கொடுத்தார். இதேபோல் ருதுராஜ் கெயிக்வாட் இளம் வீரரான ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கருக்கு தனது ஆட்டநாயகன் விருதை வழங்கியுள்ளார்.
சென்னை கேப்டன்
சென்னை அணியின் எதிர்கால கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் தோனி அடுத்த ஐபிஎல் தொடரோடு ஓய்வுபெற உள்ள நிலையில், ஜடேஜா மீண்டும் கேப்டன்சியை ஏற்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை நியமித்து பிராண்ட் செய்து வருவதை போல், தோனிக்கு பின் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.