போட்டிகளில் இருந்து விலகிய ரெய்னா
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணி பல்வேறு நெருக்கடிகளுக்கு கடந்த இரு தினங்களில் ஆளாகியுள்ளது. அந்த அணியின் இரு வீரர்கள் மற்றும் 11 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல அந்த அணியின் முக்கிய வீரர் சுரேஷ் ரெய்னாவும் சொந்த காரணங்களால் இந்த சீசனில் விளையாடாமல் நாடு திரும்பியுள்ளார்.
சிஎஸ்கேவிலிருந்து விலகிய ரெய்னா
தோனிக்கு அடுத்ததாக அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்தார் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள முதல் வீரர் மற்றும் அதிக ரன்களை எடுத்துள்ள இரண்டாவது வீரர் என்ற சாதனைகளை படைத்துள்ளார் ரெய்னா. இந்நிலையில் அணியிலிருந்து இவர் விலகியுள்ளது சிஎஸ்கேவிற்கு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.
சிவராமகிருஷ்ணன் ஆலோசனை
ஆயினும் அணியில் 3வது இடத்தில் சாம் குர்ரானை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் வீரர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு அல்லது விஜய் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கலாம் என்றும் ருதுராஜ் அல்லது குர்ரான் 3வது இடத்தில் விளையாடலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அதிகமான அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ளதால் ரெய்னா வெளியேறியுள்ள இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே பதற்றப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தோனியின் கவனத்தை பெற்ற வீரர்
இதே கருத்தையே முன்னாள் பேட்ஸ்மேன் தீப் தாஸ்குப்தாவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரெய்னாவின் மிடில் ஆர்டர் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அந்த அணியின் பயிற்சி ஆட்டங்களின்போது அவர் தோனியின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அதனால் ரெய்னாவிற்கு பதிலாக அவருக்கு அந்த இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 14 நாட்களுக்கு பிறகு இவர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.