ரிஷப் அதிரடி
ஷிகர் தவான் 29 ரன்களில் 5 பவுண்டரிகளை விளாசி ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் கோலி டக் அவுட்டானார். இதனையடுத்து, அணியை மீட்கும் முயற்சியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் ஈடுபட்டனர்.இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. . ரிஷப் பண்ட் 10 பவுண்டரிகள், 2சிக்சர்கள் விளாசி 85 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கே.எல், ராகுல் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
288 இலக்கு
இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 22 ரன்களிலும் ஆட்டமிழக்க மீண்டும் இந்தியா தடுமாற்றத்தை சந்தித்தது. இறுதியில் ஷர்துல் தாக்கூர், அஸ்வின் ஜோடி 48 ரன்கள் சேர்க்க,50 ஓவர் முடிவில் இந்திய அணி 287 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் இந்தியாவின் ஸ்கோர் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நடுவரிசை வீரர்கள் சொதப்பியதால் இலக்கு குறைந்தது. ஷர்துல் தாக்கூர் 40 ரன்களும், அஸ்வின் 25 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அபாரம்
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். டிகாக், ஜென்னிமன் மாலன் ஜோடி அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். சிறப்பாக விளையாடிய டி காக் 78 ரன்கள் சேர்த்தார்
எளிதில் வெற்றி
இதன் பின்னர் கேப்டன் பெவுமா பொறுப்பாக விளையாடி 35 ரன்கள் சேர்த்து பந்துவீசிய சாஹலிடமே பிடிப்பட்டார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜென்னிமன் மாலன் 91 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார்.இறுதியில் மார்க்கரம் மற்றும் வெண்டர்டுசன் எந்த நெருக்கடியும் இன்றி கூலாக விளையாடி 48 புள்ளி 1வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியை வென்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. மூன்றாவது போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது.