மூன்றாவது கிரிக்கெட் வீரர்
கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மூன்றாவது கிரிக்கெட் வீரர் சோலோ நிக்வேனி ஆவார். முன்னதாக ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் மற்றும் பாகிஸ்தானின் சபார் சர்ப்ராஸ் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதில் நிக்வேனி நிலை தான் மோசம்.
கடைசி ஆட்டம்
தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தார் சோலோ நிக்வேனி கடைசியாக ஏப்ரல் 2019இல் ஈஸ்டர்ன் ப்ராவின்ஸ் அணிக்காக ஆடினார். ஆல் - ரவுண்டரான அவர் தன் கடைசி போட்டியில் 95 ரன்கள் குவித்து இருந்தார்.
கில்லன் பார் சின்ட்ரோம்
அதன் பின் ஜூலை மாதத்தில் அவருக்கு கில்லன் பார் சின்ட்ரோம் என்ற மோசமான நோய் தாக்கியது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, நரம்புகளை தாக்கும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் உடல் வலுவிழந்து, நடுக்கம் ஏற்படும். மேலும், பல உடல் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படும்.
தொடர் சிக்கல்கள்
அப்போது அவரை குணப்படுத்த வேண்டி செயற்கையாக நான்கு வார கோமாவில் வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவரது நுரையீரல் இயந்திரம் மூலம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கணையம் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்தன.
கொரோனா வைரஸ் உறுதி
பல்வேறு பாதிப்புகளுடன் சோலோ நிக்வேனி போராடி வரும் நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது பேசும் நிலையில் இருப்பதாக அவரின் ஏஜென்ட் ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார். சோலோ நிக்வேனி தன் நிலையை எண்ணி வேதனையுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
கண்ணீர் பதிவு
அவரது பதிவு - "கடந்த ஆண்டு எனக்கு கில்லன் பார் சின்ட்ரோம் நோய் வந்தது. கடந்த 10 மாதங்களாக அதை எதிர்த்து போராடி வருகிறேன். அதில் இருந்து பாதி அளவே மீண்டுள்ளேன். எனக்கு டிபி உள்ளது. என் கணையம், சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. இப்போது கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் நடக்கிறது என எனக்கு புரியவில்லை?" என அவர் பதிவிட்டுள்ளார்.