நான்கு வீரர்கள் அரைசதம்
தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அதற்கு போட்டியாக மூன்று இங்கிலாந்து வீரர்கள் அதிரடி அரைசதம் அடித்தனர். இயான் மார்கன் 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்து மிரட்டினார்.
மூன்றாவது போட்டி
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அதன் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணி அதிரடி
தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினர். நிதான ஆட்டம் ஆடுவார் என கூறப்பட்ட டெம்பா பவுமா 24 பந்துகளில் 49 ரன்கள் எடுக்க, மறுபுறம் கேப்டன் டி காக் 4 சிக்ஸர்கள் அடித்து 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா இமாலய இலக்கு
ஹென்ரிச் கிளாசன் 4 சிக்ஸ், 4 ஃபோர் அடித்து 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்து மிரட்டினார். டேவிட் மில்லர் கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆடி 35 ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 222 ரன்களை எட்டியது. இங்கிலாந்து அணிக்கு 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.
பவுண்டரி மழை
அதிரடி ஆட்டம் ஆடுவது என முடிவு செய்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டு ஓவர்கள் தவிர்த்து மற்ற அத்தனை ஓவர்களிலும் பவுண்டரி மழை பொழிந்தது. ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். பேர்ஸ்டோ 34 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
இயான் மார்கன் மிரட்டல்
10 ஓவர்களில் 110 ரன்களை கடந்தது இங்கிலாந்து அணி. இறுதியில் கேப்டன் இயான் மார்கன் ஒரு ஃபோர் கூட அடிக்காமல், 7 சிக்ஸ் விளாசி, 22 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி இமாலய இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அபார வெற்றி
19.1 ஓவரில் 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2 - 1 என கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டி ரசிகர்களால் மறக்க முடியாத டி20 போட்டி வரிசையில் சேர்ந்தது.
அதிக பவுண்டரி
அதற்கு முக்கிய காரணம், சிக்ஸ், ஃபோர் என இரு அணிகளும் தெறிக்கவிட்டது தான். தென்னாப்பிரிக்க அணி 13 சிக்ஸ் மற்றும் 15 ஃபோர் அடித்து இருந்தது. இங்கிலாந்து அணி அதை விட ஒரு படி மேலே போய் பவுண்டரி மழை பொழிந்தது.
28 சிக்ஸ்
இங்கிலாந்து அணி 15 சிக்ஸ், 19 ஃபோர் அடித்து தெறிக்கவிட்டது. ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் சேர்ந்து 28 சிக்ஸ், 34 ஃபோர் அடித்து இருந்தன. இரு அணிகளும் சேர்ந்து 235 பந்துகளில் 448 ரன்கள் குவித்தன. அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மார்கன் அதிரடி
இயான் மார்கன் 22 பந்துகளில் 57 குவித்த நிலையில் அதில் 49 ரன்களை சிக்ஸர்கள் மூலம் மட்டுமே குவித்துள்ளார். அவரது அதிரடியால் தான் இறுதி ஓவர்களில் அழுத்தம் கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா. மார்கன் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.