முதல் போட்டி
இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது. டி20 தொடர் முடிந்த நிலையில், ஒருநாள் தொடர் துவங்க இருந்தது. கேப் டவுனில் முதல் போட்டி நடைபெற இருந்தது.
இங்கிலாந்து வீரர்கள்
இங்கிலாந்து அணி வீரர்கள் போட்டிக்கு தயாராகி மைதானம் வந்து சேர்ந்தனர். அவர்கள் போட்டிக்கு முன் பயிற்சி செய்யத் துவங்கினர். அப்போது தான் அந்த தகவல் வெளியானது. தென்னாப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என கூறப்பட்டது.
தள்ளி வைப்பு
இதை அடுத்து போட்டி நடைபெறுவது சந்தேகம் தான் என கூறப்பட்டது. அதே போல டாஸ் போட சில நிமிடங்கள் முன்பு போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் சேர்ந்து இந்த முடிவை எடுத்தன.
அச்சம்
முன்னதாக டி20 அணியில் இரண்டு வீரர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஒருநாள் போட்டிக்கு முன்பும் ஒரு தென்னாப்பிரிக்க வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சந்தேகம்
பல தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு இந்த தொற்று நோய் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டி தற்போது டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து வீரர்களுக்கும் எடுக்கப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை பொறுத்தே ஒருநாள் போட்டி நடைபெறுவது முடிவு செய்யப்படும்.
என்ன நடந்தது?
டி20 தொடருக்கு நடுவே தென்னாப்பிரிக்க அணியில் சிலர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. இதை அடுத்தே அந்த அணி வீரர்களுக்கு ஒருநாள் தொடருக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு வீரருக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.