கேப்டன் மாற்றம்
சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. இந்த அணிக்கு முதலில் சீனியர் வீரர் ஷிகர் தவான் தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டதால் அவரை கேப்டனாக அறிவித்தனர். ஷிகர் தவான் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
சாபா கரீம் விளாசல்
இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு அதிகாரியுமான சாபா கரீம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், கே.எல்.ராகுல் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாட வருகிறார். ஜிம்பாப்வே தொடரில் அவர் ஒரு வீரராக விளையாட வேண்டும் அவ்வளவு தான். கேப்டன், துணைக்கேப்டன் என்ற பதவிகள் எல்லாம் முக்கியமில்லாத ஒன்று.
காரணம் என்ன
இந்திய அணியில் ஷிகர் தவான் சீனியர் வீரராக வலம் வருகிறார். அவரை கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டால், அவருக்கு சற்று மதிப்பு கொடுக்க வேண்டும். திடீரென கேப்டன் என அறிவித்துவிட்டு, பின்னர் கீழே இறக்கக்கூடாது. மிகவும் யோசித்து இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஹீரோவாகிவிட்டார்
தவானின் கேப்டன்சியில் வெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா சிறப்பாக விளையாடியது. அவரின் தலைமையில் விளையாடிய வீரர்கள், அவரை ஹீரோ போன்று பார்க்கின்றனர். இப்படி இருக்கையில் பிசிசிஐ இதுபோன்று செய்வது தவறு என சாபா கரீம் தெரிவித்துள்ளார்.