சச்சின் எதிர்பார்ப்பு
சச்சின் டெண்டுல்கர் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு ஏற்படும். மெக்கிராத், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், வாசிம் அக்ரம், பிரெட் லீ, வக்கார் யூனிஸ் உள்ளிட்ட சிறந்த பந்துவீச்சாளர்கள் அவரை ஆட்டமிழக்கவும் செய்துள்ளனர். அதே சமயம், அவர்கள் பந்துவீச்சை சச்சின் வெளுத்தும் இருக்கிறார்.
சக்லைன் முஷ்டாக் - சச்சின்
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களில் ஒருவரான சக்லைன் முஷ்டாக்கும் சச்சினை பல முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். சச்சினும் அவர் பந்துவீச்சில் அதிரடி ஆட்டம் ஆடி உள்ளார். சக்லைன் முஷ்டாக் சர்வதேச போட்டிகளில் ஆடத் துவங்கிய போது நடந்த அந்த சம்பவம் பற்றி கூறினார்.
சஹாரா கோப்பை
1997ஆம் ஆண்டு கனடாவில் சஹாரா கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது சக்லைன் முஷ்டாக், சச்சினுக்கு பந்து வீசி வந்தார். அப்போது சச்சின் டெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேன் என முத்திரை குத்தப்பட்டு இருந்தார்.
சீண்டிய முஷ்டாக்
எனவே, சிறந்த பேட்ஸ்மேனை வம்பிழுத்து ஆட்டமிழக்கச் செய்வோம் என திட்டமிட்டுள்ளார் சக்லைன் முஷ்டாக். சில முறை சச்சினை சீண்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார். தேவையில்லாமல் நடந்த இந்த சீண்டலை நிறுத்த சச்சின் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்.
சச்சின் கேட்ட அந்த கேள்வி
சச்சின் டெண்டுல்கர், "நான் உன்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. அப்புறம் ஏன் நீ என்னிடம் தவறாக நடந்து கொள்கிறாய்?" என சக்லைன் முஷ்டாக்கை பார்த்து கேள்வி கேட்டுள்ளார். அதைக் கேட்டு வாயடைத்துப் போயுள்ளார் சக்லைன்.
கூனிக் குறுகிய சக்லைன் முஷ்டாக்
பின், "ஒரு மனிதராகவும், வீரராகவும் உங்கள் மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன்" என சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார். அதைக் கேட்டு அவமானத்தில் கூனிக் குறுகிய சக்லைன் முஷ்டாக் அதன் பின் சச்சினை சீண்டவே கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
மன்னிப்பு கேட்டார்
அந்தப் போட்டி முடிந்த உடன் சச்சினை சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார் சக்லைன் முஷ்டாக். அப்போது அவரிடம் தான் என்ன கூறினேன் என்பதை சொல்ல மறுத்துவிட்டார் சக்லைன் முஷ்டாக். ஆனால், அதன் பின் சச்சினை அவர் சீண்டவே இல்லை.
சீண்டுவது பற்றி யோசித்ததே இல்லை
அது பற்றி சக்லைன் முஷ்டாக் கூறுகையில், "அதன் பின் சச்சின் என் பந்துவீச்சில் அதிரடி ஆட்டம் ஆடினாலும், நான் அவரை சீண்டுவது பற்றி யோசித்ததே இல்லை" என்றார். மேலும், தூஸ்ரா போடுவதில் திறமைசாலியான சக்லைன் முஷ்டாக், சச்சின் அதை சரியாக கணிப்பார் என கூறினார்.
கத்தி போன்ற கூர்மையானது
"கண்கள் கடவுள் கொடுத்த பரிசு. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் வேறு வேறு விதத்தில் பார்ப்பார்கள். சிலர் மற்றவர்களை விட வேகமாக கணித்து விடுவார்கள். சச்சின் கண்கள் கத்தி போன்ற கூர்மையானது" எனக் கூறி தூஸ்ரா பந்துகளை சச்சின் கணிப்பதை குறிப்பிட்டு பாராட்டினார் முஷ்டாக்.