சச்சின் அறிமுகம்
சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தான் சர்வதேச அறிமுகம் பெற்றார். 16 வயதில் இந்திய அணியில் இடம் பெற்ற அவர் தொடர்ந்து அணியில் இடம் பெற்று தன்னை நிரூபித்து வந்தார். 80களின் இந்திய வீரர்களுடன் அவர் தாக்குப்பிடித்து அணியில் இடம் பெற்று வந்தார்.
அந்த சம்பவம்
மிடில் ஆர்டர் வீரரான அவர் 1994இல் நடந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரில் துவக்க வீரராக ஒரு போட்டியில் துவக்க வீரர் நவ்ஜோத் சிங் காயம் காரணமாக ஆட முடியாததால் துவக்க வீரராக ஆடும் வாய்ப்பை பெற்றார். அது பற்றி அவரே கூறி உள்ளார்.
அசாருதீன் மற்றும் வடேகர்
"நான் ஹோட்டலை விட்டு வெளியேறிய போது எனக்கு நான் அன்று துவக்கம் அளிப்பேன் என தெரியாது. நாங்கள் மைதானத்தை அடைந்தோம். அங்கே உடை மாற்றும் அறையில் அசாருதீன் மற்றும் அஜித் வடேகர் (மேலாளர்) இருந்தனர்"
எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்
"அவர்கள் சித்து கழுத்தில் காயம் ஏற்படுத்திக் கொண்டதால் ஆட முடியாத நிலையில் இருப்பதாக கூறினர். அதனால், யார் துவக்கம் அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. நான் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டேன். எனக்கு அங்கே இருந்த பவுலர்களை அடித்து ஆட முடியும் என அதிக நம்பிக்கை இருந்தது"
ஏன் துவக்கம்?
"முதல் எதிர்வினை ஏன் நீ துவக்கம் அளிக்க விரும்புகிறாய்? என்பதாக இருந்தது. ஆனால், என்னால் அதை செய்ய முடியும் என நான் உறுதியாக இருந்தேன். மேலும், நான் அங்கே போய் தூக்கி அடித்து விட்டு வந்து விடுவது என்று இல்லாமல், என் இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடுவதாக என் திட்டம் இருந்தது."
நிதான ஆட்டம்
"அது வரை 1992 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு முறை மார்க் கிரேட்பாட்ச் மட்டுமே அப்படி ஆடி இருந்தார். காரணம், பந்து புதியதாக இருக்கும் என்பதால் முதல் 15 ஓவரில் நிதான ஆட்டம் ஆடுவதே டிரென்ட்டாக இருந்தது"
கடைசி 7, 8 ஓவர்கள்
"அதன் பின் பந்தின் பளபளப்பு தன்மை குறையும். மெதுவாக பந்தை அடித்து ஆடத் துவங்குவார்கள். கடைசி 7, 8 ஓவர்களில் முடிந்த வரை அதிரடி ஆட்டம் ஆடுவார்கள். நான் முதல் 15 ஓவர்களில் அடித்து ஆடலாம் என முடிவு செய்தேன்."
ஒரே ஒரு வாய்ப்பு
"அப்படி ஆடினால் அது எதிரணிக்கு கடும் அழுத்தத்தை கொடுக்கும். எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தாருங்கள். நான் இந்த திட்டத்தில் தோற்று விட்டால் மீண்டும் உங்களிடம் வர மாட்டேன் என்றேன். அது வேலை செய்தது." இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.
எந்த போட்டி?
1994ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் இந்த மாற்றம் நடந்தது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 49.4 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இந்தியா வெற்றி
அடுத்து ஆடிய இந்திய அணிக்கு சச்சின் - அஜய் ஜடேஜா துவக்கம் அளித்தனர். சச்சின் 49 பந்துகளில் 82 ரன்கள் குவிக்க, இந்திய அணி 23.2 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அதன் பின் சச்சின் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கினார்.