6ம் நாள் ஆட்டம்
ரிசர்வ் டே ஆட்டம் தொடங்கும் போது இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் 64/2 என்ற ஸ்கோருடன் களமிறங்கியது. அணியின் கேப்டன் விராட் கோலியும், நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட சட்டீஸ்வர் புஜாராவும் களத்தில் இருந்தனர். ஆனால் தொடக்கத்திலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, பின்னர் வந்த வீரர்களும் பதற்றத்தில் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இளம் வீரர் ரிஷப் பண்ட் மட்டும் தான் 41 ரன்களை சேர்த்தார். இதனால் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி சுலபமான இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.
சச்சின் அதிருப்தி
இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி கோட்டை விட்டதற்கான துல்லியமான காரணத்தை முன்னாள் வீரர் சச்சின் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள. நீங்கள்தான் தலைசிறந்த அணி. ஆனால் இந்திய அணி மோசமான ஆட்டத்தால் ஏமாற்றம் அளித்துள்ளது. ரிசர்வ் டேவின் முதல் 10 ஓவர்கள் மிக முக்கியம் என ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் 10 பந்துகள் இடைவெளியில் கோலி, புஜாரா இருவரும் அவுட்டாகினர். இதுதான் அணி மீதான அழுத்தத்தை அதிகரித்தது எனக்கூறியுள்ளார்.
விராட் கோலியின் பதில்
தோல்வி குறித்து தனது விளக்கத்தை அளித்திருந்த விராட் கோலி, ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் இருப்பது போன்று டெஸ்ட் அணியில் சில வீரர்கள் தாமாக பொறுப்பை ஏற்று ஆடவில்லை. இனி வரும் காலங்களில் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என அணி வீரர்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
ரசிகர்களின் குற்றச்சாட்டு
ரிசர்வ் டேவின் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்களை அதிரடி காட்டுமாறு விராட் கோலி கூறியதாக தெரிகிறது. இதனால் பந்தின் திசையை அறியாமல் சுழற்றி சுழற்றி விளையாடிய பேட்ஸ்மேன்கள் பதற்றத்தில் அடுத்தடுத்து அவுட்டாகினர். குறிப்பாக பொறுப்புடன் அணிக்கு நம்பிக்கை தந்திருக்க வேண்டிய விராட் கோலியே சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இதுவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.