Recommended Video
2011 உலகக்கோப்பை இறுதிக்கு முன்..
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. ஆனால், அணியில் அப்போது குழப்பம் இருந்தது. எந்த 11 வீரர்களை ஆட வைக்கலாம் என்பது தான் அது. வேகப் பந்துவீச்சாளர்களில் இருவர் காயம் அடைந்து இருந்தனர். எனவே, மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாமா? என்ற குழப்பம் இருந்தது.
இரு வீரர்கள் காயம்
ஆஷிஷ் நெஹ்ரா, பிரவீன் குமார் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். ஆஷிஷ் நெஹ்ரா அனுபவ வீரர் என்பதால் அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஜாகிர் கான், முனாப் பட்டேல் மட்டுமே அணியில் ஆட இருந்த வேகப் பந்துவீச்சாளர்கள்.
என்ன திட்டம்?
மூன்றாவது வேகப் பந்துவீச்சாளருக்கு பதில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக அஸ்வினை பயன்படுத்தலாமா? என்பது தான் கடைசியாக இருந்த அதிரடி திட்டம். அஸ்வின் அனுபவ பந்துவீச்சாளர் இல்லை என்பதால் அது தயக்கத்தை ஏற்படுத்தியது.
சச்சின் யோசனை
அப்போது மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கர் அந்த உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் மட்டுமே மோசமாக ஆடி, பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டு மாற்று வீரராக இருந்த ஸ்ரீசாந்தை அழைத்துக் கொண்டு பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் சென்றார். இவரை இறுதிப் போட்டியில் ஆட வைக்கலாம் என்றார்.
அணியில் தயக்கம்
அந்த யோசனை கேப்டன் தோனியிடம் கூறப்பட்டது. ஸ்ரீசாந்த் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் 5 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்து இருந்ததால் அவரை அணியில் தேர்வு செய்வதில் தயக்கம் இருந்தது.
முக்கிய வீரர்கள் ஆதரவு
அப்போது அணியில் இருந்த மற்ற மூத்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஸ்ரீசாந்தை ஆட வைக்க ஆதரவு அளித்தனர். அவர் ஏற்கனவே 2007 உலகக்கோப்பை இறுதியில் ஆடிய அனுபவம் உள்ளவர். மேலும், 2011 உலகக்கோப்பை தொடரிலும் ஒரு போட்டியில் ஆடி இருந்தார்.
ஒப்புக் கொண்ட தோனி
மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் ஆடுவதை விட மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் ஆடுவதே பாதிப்பு இல்லாத முடிவு என்பதால் கேப்டன் தோனி ஸ்ரீசாந்தை தேர்வு செய்ய ஒப்புக் கொண்டார். இறுதிப் போட்டியில் இப்படித் தான் ஸ்ரீசாந்த் இடம் பெற்றார்.
சொதப்பிய ஸ்ரீசாந்த்
மூத்த வீரர்களின் ஆதரவுடன் இறுதிப் போட்டியில் ஆடிய ஸ்ரீசாந்த் இந்த முறையும் மோசமாகவே பந்து வீசினார். 8 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இரண்டு நோ பால் வேறு வீசி இருந்தார்.
வெற்றி கிடைத்தது
எனினும், இந்தியா பேட்டிங்கில் கலக்கி வெற்றி பெற்றது. ஒருவேளை அன்று கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை ஆட வைத்து இருந்தால் நிலைமை மோசமாக கூட மாறி இருக்கலாம். எப்படியோ இந்தியாவின் வெற்றியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்று விட்டார்.