லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை, 5 நிமிட மணியை அடித்து கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மழை பெய்ததால், அந்த வாய்ப்பை சச்சின் இழந்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் முதல் நாளில், போட்டி துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன், அங்குள்ள மணி அடிக்கப்படும்.
மைதானத்தில் பவுலர்ஸ் பார் பகுதியில் அமைந்துள்ள இந்த மணியை அடித்து போட்டியை துவக்கி வைக்கும் வழக்கம் 2007ல் துவங்கியது. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள் அல்லது மிகச் சிறந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் இந்த மணியை அடித்து போட்டியை துவக்கி வைப்பர்.
இதற்கு முன், சுனில் கவாஸ்கர், பட்டோடி, திலிப் வெங்சர்கார், ராகுல் டிராவிட், கபில் தேவ், சவுரவ் கங்குலி ஆகியோர் இவ்வாறு மணியடித்து போட்டியை துவக்கி வைத்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை, கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், 5 நிமிட மணியை அடித்து துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், போட்டியின் முதல் நாளான நேற்று மழை பெய்ததால், ஆட்டம் நடக்கவில்லை.
இரண்டாவது இன்று போட்டி துவங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் செய்கிறது. ஆனால், சச்சின் டெண்டுல்கர் நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டார். அதனால், இன்று மணியடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான, 83 வயதாகும் டெட் டெக்ஸ்டர், மணியடித்து போட்டியை துவக்கி வைத்தார்.