மும்பை: 2007ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்திய அணி படுதோல்வி அடைந்து தாயகம் திரும்பியதை இந்திய ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். அதே வருடத்தில் டி-20 உலகக் கோப்பைக்கு சச்சின், கங்குலி, திராவிட் போன்றவர்கள் விலகிக்கொள்ள, அப்போதைய சீனியர்களான யுவ்ராஜ், ஹர்பஜன், சேவாக் போன்றவர்களைத் தாண்டி தோனியிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை நிர்வாகம் ஒப்படைத்தது.
தோனி கேப்டனாக சச்சினின் ஆதரவு அதிக அளவில் இருந்தது என்பது பரவலாக பேசப்பட்டாலும், சச்சின் இதுவரை அதைப் பற்றி ஒன்றுமே கூறியதில்லை. இந்நிலையில், ஐபிஎல் தொடரை சில வருடம் முன்னின்று வழங்கிய கௌரவ் கபூர் நடத்தும் நிகழ்ச்சியில் சச்சின் முதன்முறையாக தோனிக்கு ஏன் ஆதரவு தெரிவித்தேன் என்பதை உடைத்தார்.
"நான் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்யும்போது, தோனியுடன் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பேன். ஆட்டத்தின் நுணுக்கங்களை அவர் எவ்வாறு அறிந்துள்ளார் என்று சில கேள்விகள் மூலம் புரிந்துக் கொள்ள முயன்றேன். அப்போதெல்லாம் வழக்கமாக செயல்படக்கூடிய விதத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு புதிதாக சில உத்திகளை சொல்வார். அப்போதே முடிவெடுத்துவிட்டேன் தோனி தான் இந்தியாவை வழிநடத்த சரியான ஆள் என்று..."
சச்சினின் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் கூறிய தோனி கனவிலும் நினைத்திருக்க மாட்டார் தன்னை சச்சின் இன்டர்வியூ செய்கிறார் என்று. தோனியிடம் இதைப்பற்றி கேட்கையில், "மிகவும் சாதாரணமாகவே பேசிய விஷயங்கள் அதெல்லாம். மேலும் என்னை நிர்வாகம் கேப்டனாக நியமித்தப்போது என்னிடம் அவர்கள் ஏதும் கலந்தாலோசிக்கவில்லை. அணியுடன் நான் உலககோப்பைக்கு பயிற்சி செய்துக்கொண்டிருந்தப்போது திடீரென எனக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது.." என கூறினார்.
எப்படியோ சச்சின் விளையாடி ஒரு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், சமயோசிதமாக செயல்பட்டு இன்னொரு கோப்பையை வெல்லவும் உதவியிருக்கிறார்.