இஷான் நீக்கம்
இதில், மும்பை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. அணியில் தொடர்ந்து சொதப்பி வந்த இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சௌரப் திவாரி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆடம் மில்னேவுக்கு பதில் கோல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். இதில், இஷான் கிஷன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மிக முக்கிய வீரராவார். அதுவும், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிகர் தவான், இந்திய அணியில் நீக்கப்பட, அவருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டனர் இஷான். ஆனால், இஷான் கிஷன் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. இதனால், இன்றைய போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அசத்திய பொல்லார்ட்
பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மாயங்க் அகர்வால் அணியில் இருந்து விலகியிருக்க, அவருக்கு பதில் மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவர் க்ருனால் பாண்ட்யா ஓவரில் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கெயில் வெறும் 1 ரன்னில், பொல்லார்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தார். இதன் பிறகு, கேப்டன் லோகேஷ் ராகுல் 21 ரன்களில் பொல்லார்டின் அதே ஓவரில் ஷார்ட் பிட்ச் பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார். இந்த ஒரே ஓவரில், பஞ்சாப் அணியின் அஸ்திவாரத்தையே நாசம் செய்துவிட்டார்.
ஏமாந்த கெயில்
இந்த ஓவர் வீசுவதற்கு முன்பு, சச்சின் கொடுத்த ஐடியா மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. க்றிஸ் கெயில் தன்னை நிரூபிக்க இந்த போட்டியில் நிச்சயம் அதிரடியாக விளையாடுவார் என்று கணித்திருந்த சச்சின், பொல்லார்டிடம் கெயிலின் 'ஈகோ'வை தூண்டும் வகையில் பந்து வீச அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக ஷார்ட் பிட்ச் பந்துகளையும் வீச அறிவுறுத்தினார். இதற்கு அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு டபுள் "ஜாக்பாட்" அடித்தது. பொல்லார்ட் ஓவரை விளாச வேண்டும் என்ற நோக்கத்தில், தேவையில்லாமல் தூக்கி அடித்து, சிக்ஸ் லைனில் தனது விக்கெட்டை கெயில் இழக்க, அதே ஓவரில் தொடர்ச்சியாக வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை சிக்ஸருக்கு அனுப்ப நினைத்து கேட்ச் கொடுத்து ஏமாந்தார் லோகேஷ் ராகுல்.
பஞ்சாப் நிலைமை?
ஐபிஎல் 2021 தொடரில், சென்னை, டெல்லி அணிகள் ஏறக்குறைய தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், மூன்றாவது அணியாக பெங்களூரு ஓரளவு வலிமையாக பிளே ஆஃப் நுழைய ரெடியாகி வருகிறது. இந்த நான்காவது இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவுகிறது. கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள், 8 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேஸில் நுழைய தீவிரமாக உள்ளன. அந்த வகையில், மும்பை அணி இன்றைய போட்டியில் பஞ்சாபை கட்டுப்படுத்தி வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.