1998 ஷார்ஜா போட்டி
1998இல் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இடையே ஆன முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற தன் கடைசி லீக் போட்டியை வெல்ல வேண்டும் அல்லது நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை முந்த வேண்டும் என்ற இக்கட்டில் இருந்தது.
ஆஸ்திரேலியா சவால்
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் குவித்தது. அந்த ஆடுகளத்தில் இந்த ஸ்கோரை சேஸிங் செய்வது கடினம் என கருதப்பட்டது. மற்ற இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு ரன் ரேட்டை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது.
தனி ஆளாக போராடிய சச்சின்
ஆனால், சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என குறியாக இருந்தார். கங்குலி 17, நயன் மோங்கியா 35, அசாருதீன் 14, ஜடேஜா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். சச்சின் தனி ஆளாக போராடினார்.
மணல் புயல்
இதன் இடையே பாலைவனத்தில் ஏற்படும் மணல் புயல் வந்தது. அதனால் போட்டி பாதியில் தடைபட்டது. பின்னர் இந்தியாவின் இன்னிங்க்ஸ் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 276 ஆக மாற்றப்பட்டது. புயலுக்கு பின் இந்திய பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க முடியாது என்றே பலரும் கருதினர்.
லக்ஷ்மன் கூட்டணி
ஆனால், சச்சின் தனி ஆளாக போட்டியை தன் தோளில் தாங்கினார், விவிஎஸ் லக்ஷ்மன் விக்கெட் வீழ்ச்சி அடையாமல் மறுமுனையில் நின்றார். ஐந்தாவது விக்கெட்டுக்கு சச்சின் - லக்ஷ்மன் ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. இதில் பெரும்பாலான ரன்களை சச்சினே எடுத்தார். அவர் 131 பந்துகளில் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கோபப்பட்ட சச்சின்
அந்த ஆட்டத்தில் லக்ஷ்மன் மந்தமாக ரன் சேர்த்தார். சில முறை சச்சின் இரண்டு ரன்கள் ஓடுமாறு லக்ஷ்மனை அழைத்த போதும் அவர் மறுத்துள்ளார். அதனால் கோபம் அடைந்த சச்சின், "இரண்டு ரன் ஓடுங்கள்.. நான் ஓட அழைத்தும் நீங்கள் ஏன் ஓடவில்லை" என காட்டமாக பேசினார்.
இந்தியா தோல்வி
அந்தப் போட்டியில் சச்சின் ஆட்டமிழந்த பின் கடைசி 3 ஓவர்களில் வெறும் 8 ரன் மட்டுமே எடுத்த இந்திய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும், சச்சினின் அதிரடியால் நியூசிலாந்து அணியை விட கூடுதல் ரன் ரேட் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியிலும் சச்சின் சதம் அடிக்க, இந்தியா வெற்றி பெற்றது.
அண்ணன் கோபம்
அந்த தொடருக்கு பின் வீட்டுக்கு சென்ற சச்சினிடம், அவர் அண்ணன் கோபப்பட்டுள்ளார். விவிஎஸ் லக்ஷ்மனிடம் சச்சின் கோபமாக பேசியதை டிவியில் பார்த்த சச்சினின் அண்ணன், இளம் சச்சினுக்கு திட்டி அறிவுரை கூறி உள்ளார்.
அறிவுரை சொன்ன அண்ணன்
"மைதானத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. அவர் உனது சக வீரர். அவரும் அணிக்காக தான் ஆடுகிறார். இது உன்னுடைய போட்டி மட்டுமல்ல. அவரும் உன்னுடன் ஆடுகிறார்." என சச்சினின் அண்ணன் அவருக்கு அறிவுரை கூறி உள்ளார்.
ஒளிந்து கொண்ட சச்சின்
அதனால், அப்போது வீட்டில் அண்ணனின் கண்ணில் படாமல் ஒளிந்து இருந்ததாக அந்த சம்பவம் பற்றி கூறி உள்ளார் சச்சின். அந்தப் போட்டியில் இறுதிக்கு தகுதி பெறுவது என்பதை விட, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தகுதி பெற வேண்டும் என தான் எண்ணியதே தான் அப்படி நடந்து கொள்ள காரணம் என சச்சின் கூறினார்.