முதல் டெஸ்ட் போட்டியில் சதம்
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக உள்ளார் பிரித்வி ஷா. இவர் ராஜ்காட்டில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக களமிறங்கி சதமடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். இதையடுத்து இவருக்கு சோதனைக்காலம் ஏற்பட்டது. காயம் காரணமாகவும், ஊக்கமருந்து சோதனைக்காக தடை பெற்றும், சிறிது காலம் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார் பிரித்வி ஷா.
பிரித்வி ஷா பெருமிதம்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிய பிரித்வி ஷா, சச்சின் டெண்டுல்கர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தான் 8 வயதாக இருந்தபோது சச்சின் டெண்டுல்கரை முதல்முதலாக சந்தித்ததாகவும், அப்போது முதல் அவர் தனது வழிகாட்டியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் பயிற்சி மேற்கொள்ளும்போது, சச்சின் டெண்டுல்கர் தவறாது வந்து அதை பார்ப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும்
தான் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், அவர் கிரிக்கெட் குறித்த தொழில்நுட்பங்களை காட்டிலும் மனவளம் குறித்துதான் அதிகமாக பேசி ஆலோசனை வழங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி
சச்சின் டெண்டுல்கரும் சமீபத்தில் பிரித்வி ஷா குறித்து ஒரு இன்டர்வியூவில் பேசியிருந்தார். கடந்த பல வருடங்களாக தான் பிரித்வி ஷாவுடன் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்வி மிகவும் திறமையானவர் என்றும் அவருக்கு உதவி புரிவதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அவரிடம் கிரிக்கெட் குறித்தும், கிரிக்கெட் தவிர்த்து வாழ்க்கையை எதிர்கொள்வது குறித்தும் தான் தொடர்ந்து பேசுவதாகவும் கூறியுள்ளார்.