சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்
2000மாவது ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் நடைபெற்றது. நைரோபியில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய அணி அப்போது வலுவாக இருந்தது. அந்த அணியை வீழ்த்த இந்திய அணியால் முடியுமா? என்ற கேள்வி இருந்தது.
மெக்கிராத்துக்கு குறி
இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது மூத்த வீரர்கள் சச்சின், கங்குலி துவக்கம் அளிக்க களமிறங்கினர். சச்சின், ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மெக்கிராத்தை குறி வைத்து வீழ்த்த ஒரு திட்டம் தீட்டி அதை கங்குலியிடம் கூறினார்.
சீண்டி விட்ட சச்சின்
அந்த திட்டத்தின் படி மெக்கிராத்தை சீண்டி விட்டு கோபமடைய செய்தார் சச்சின். பொதுவாக சச்சின் அமைதியானவர். எந்த வம்பு, தும்புக்கும் போக மாட்டார். ஆனால், அன்று அனைத்து அணிகளையும் சீண்டி வந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த அவர்களின் யுக்தியையே கையாண்டார் சச்சின்.
உடலை பதம் பார்த்த பந்துகள்
சச்சின் சில வார்த்தைகளை பேசி சீண்டி விட்ட உடன் மெக்கிராத் சச்சின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து அவரது உடலை பதம் பார்க்கும் வகையில் பந்து வீசினார். சில பந்துகள் சச்சின் உடலை பதம் பார்த்தாலும், சச்சின் அவரது ஓவரை குறி வைத்து ரன் குவித்தார்.
சச்சின் அதிரடி ஆட்டம்
சச்சின் அந்தப் போட்டியில் 37 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். மூன்று சிக்ஸர், மூன்று பவுண்டரி அடித்து இருந்தார். இந்திய அணி 11.4 ஓவர்களில் 66 ரன்களை எட்டியது. அப்போது சச்சின் ஆட்டமிழந்தார். எனினும், ஆஸ்திரேலியாவால் முதல் பத்து ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.
யுவராஜ் சிங் அதிரடி
கங்குலி 24, வினோத் காம்ப்ளி 29 ரன்கள் எடுத்தனர். தன் முதல் அறிமுக இன்னிங்க்ஸில் பேட்டிங் ஆடிய யுவராஜ் சிங் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கண்டு எந்த அச்சமும் இன்றி அடித்து ஆடினார். 80 பந்துகளில் அவர் 84 ரன்களை கடந்தார்.
இந்தியா வெற்றி
இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 245 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆட்ட நாயகன் விருது வென்றார்
அந்த போட்டியில் யுவராஜ் சிங் சிறந்த அறிமுகம் பெற்றார். தன் முதல் பேட்டிங் இன்னிங்க்ஸில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். சச்சின் திட்டத்தில் வீழ்ந்த சிறந்த வேகப் பந்துவீச்சாளரான மெக்கிராத் அந்தப் போட்டியில் 9 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.