மும்பை: கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கை செல்லும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதைப் பெற்றுள்ள அவர், கிரிக்கெட்டில் மிகப் பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார்.
அவருடைய மகன் அர்ஜூனும், தந்தை வழியில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். கடந்தாண்டு நடந்த கூச் பெஹர் கோப்பை போட்டியில் இரண்டு முறை தலா 5 விக்கெட்கள் மற்றும் ஒரு முறை நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.
பவுலிங்கில் தீவிரமாக உள்ள அர்ஜூன் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். இந்தாண்டு ஜனவரியில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 48 ரன்கள் குவித்ததுடன், நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, இலங்கைக்கு ஜூலை மாதம் செல்கிறது. அங்கு இரண்டு நான்கு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருதினப் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில், இரண்டு நான்கு நாள் போட்டிகளுக்கான அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்பட பல இந்திய வீரர்கள், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.