மும்பை:பயிற்சி ஆட்டத்தில் தோற்றிருப்பதை நினைத்து பீதி அடைய வேண்டாம் என்று இந்திய அணி வீரர்களுக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தி உள்ளார்.
உலக கோப்பைக் கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக, பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டனில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா மட்டும் ஏதோ தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.
தோனி சற்று நேரம் தாக்குபிடித்து 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து அழகாக வெற்றி பெற்றது.
பயிற்சி ஆட்டத்திலே இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து பலரும் விமர்சித்தனர். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் சொதப்பி தள்ளினர் என்று கூறினர். இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது குறித்து சச்சின் கருத்து தெரித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அணியை பற்றி நான் மதிப்பீடு செய்ய மாட்டேன். இது ஒரு தொடர். இதுபோன்ற விஷயங்களும் நடக்கும்.
முக்கியமான போட்டிகள் இன்னும் தொடங்கவே இல்லை. ஒன்றிரண்டு போட்டிகள் இப்படி நடக்கலாம். மைதானத்தை தன்மை பற்றி அறிந்து கொள்ளவே பயிற்சி ஆட்டங்கள் என்பதை வீரர்கள் உணர வேண்டும். யாரும் தோல்வி குறித்து பீதி அடைய தேவையில்லை என்று கூறினார்.