காட்டுத்தீ
ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் மிகப் பெரிய அளவில் காட்டுத்தீ பரவியது. அதில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான விலங்கு மற்றும் பறவை இனங்கள் அழிந்தன. ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். பல மக்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
கண்காட்சி போட்டி
அந்த பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இணைந்து ஒரு கண்காட்சி போட்டி நடத்த முடிவு செய்தனர். அதன்படி பாண்டிங் மற்றும் கில்கிறிஸ்ட் தலைமையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்க முடிவு செய்தனர்.
பெரும் எதிர்பார்ப்பு
மேலும், வாசிம் அக்ரம், பிரையன் லாரா, யுவராஜ் சிங் போன்ற பிற நாடுகளை சேர்ந்த பிரபல முன்னாள் வீரர்கள் இந்த கண்காட்சிப் போட்டியில் பங்கேற்க முன் வந்தனர். அதனால், இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
சச்சின் வருகை
பாண்டிங் லெவன் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார் பாண்டிங். சச்சின் அதற்கு ஒப்புக் கொண்டார். அதனால், சச்சின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். எனினும், அவர் பேட்டிங் செய்யப் போவதில்லை என்பது சிலருக்கு வருத்தம் அளித்தது.
எலிஸ் பெர்ரி கோரிக்கை
இந்த நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரி, கண்காட்சிப் போட்டியின் இடையே சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் பேட்டிங் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதை சச்சின் ஏற்றுக் கொண்டு ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய ஒப்புக் கொண்டார்.
40 நிமிடம் பயிற்சி
அந்த ஒரு ஓவருக்காக சச்சின் சுமார் 40 நிமிடம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அதை கேலி செய்த யுவராஜ் சிங், சச்சின் ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்யப் போகிறேன் என்றார். ஆனால், 40 நிமிடம் விடாமல் பேட்டிங் பயிற்சி செய்தார் என அவரை கிண்டல் செய்தார்.
ஐந்தரை ஆண்டுகள்
அந்த கண்காட்சிப் போட்டியின் இடையே ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள் பீல்டிங் செய்ய, எலிஸ் பெர்ரி பந்து வீசினார். சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்தார். சுமார் ஐந்தரை ஆண்டுகள் கழித்து மீண்டும் கிரிக்கெட் களத்தில் சச்சின் பேட்டிங் செய்தார்.
|
முதல் பந்தில் ஃபோர்
அவர் முதல் பந்தில் ஃபோர் அடித்து ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்தார். பல ஆண்டுகள் கிரிக்கெட் ஆடாத நிலையிலும், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஃபோர் அடித்து மிரட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பந்தை பார்ப்பதே கடினம்
ஒரு ஓவர் ஆடி முடித்த பின், மீண்டும் கிரிக்கெட் ஆடுவது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது சச்சின் கூறுகையில், நேற்று பயிற்சியின் போது தான் தன்னால் பந்தை பார்க்க முடிகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பந்தை அடிப்பது பற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை" என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
பாண்டிங் அணி வெற்றி
கண்காட்சிப் போட்டியில் பாண்டிங் அணி 105 ரன்கள் குவித்தது. பாண்டிங் 26, பிரையன் லாரா 30 ரன்கள் குவித்தனர். அடுத்து ஆடிய கில்கிறிஸ்ட் லெவன் அணியில் ஷேன் வாட்சன் 30, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 29 ரன்கள் குவித்தனர். எனினும், அந்த அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாண்டிங் அணி வெற்றி பெற்றது.