முதல் டெஸ்ட் தொடர்
சச்சினின் முதல் டெஸ்ட் தொடர் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்றது. அந்த அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம் போன்ற சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் ஒருபுறம் இருக்க, வக்கார் யூனிஸ் அப்போது தான் அறிமுகம் ஆனார். அறிமுகத்திலேயே அவர் தன் முத்திரையை பதித்தார்.
15 வயது சச்சின்
அந்த தொடரில் இந்திய அணியின் 15 வயதே ஆன சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானார். பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மூவரும் ஸ்விங், பவுன்சர் என மின்னல் வேக பந்துவீச்சில் தாக்குதல் நடத்துவார்கள் என்பது தெரிந்தும் சச்சின் அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றார்.
பள்ளிக்கூட போட்டி போல ஆடினார்
சச்சின் டெண்டுல்கர் அப்போது அதிக உள்ளூர் போட்டிகளிலும் ஆடி இருக்கவில்லை. அதனால், பள்ளிக்கூட கிரிக்கெட் போட்டிக்கு தயார் ஆவது போல தான் தயாரானார் சச்சின். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்பதை பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை.
உடலை பதம் பார்த்த பந்துகள்
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் நான்கு விக்கெட்கள் வீழ்ந்த உடன் களமிறங்கினார் சச்சின். சிறுவன் என்பதால் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் கரம் வைத்து அவருக்கு மின்னல் வேக பவுன்சர் பந்துகளாக வீசினார்கள். பல பந்துகளை சச்சினால் கணிக்கவே முடியவில்லை. பந்து அவரது உடலை பதம் பார்த்தன.
24 பந்தில் அவுட்
அன்று வெறும் 24 பந்துகள் தான் சந்தித்தார் சச்சின். 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவமானத்துடன் இந்திய அணி அறையை நோக்கி நடையைக் கட்டினார். நான் ஏன் இப்படி செய்தேன்? ஏன் இப்படி விளையாடினேன்? என எண்ணிக் கொண்டே சென்றார்.
அவமானத்தில் அழுதார்
உடை மாற்றும் அறைக்கு சென்ற அவர், யாரையும் பார்க்காமல் நேராக குளியல் அறைக்கு சென்றார். அப்போது கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. தன் முதல் போட்டியில் தான் ஆடிய மோசமான ஆட்டத்தை எண்ணி அழுதார்.
இத்துடன் கதை முடிந்தது
நமக்கு இங்கே இடமே இல்லை. இது தான் உனது முதலும், கடைசியுமான போட்டி என நினைத்தார். அப்போதே தன்னம்பிக்கை இழந்தார். இதற்கிடையே அணியின் மூத்த வீரர்கள் சச்சின் சோர்ந்து போனதை அறிந்தனர். அவருக்கு ஆறுதல் கூறினர்.
ரவி சாஸ்திரி சொன்ன அட்வைஸ்
அப்போது ரவி சாஸ்திரி சிறப்பான அறிவுரை கூறி உள்ளார். நீ பள்ளிக்கூட போட்டி போல ஆடி இருக்கிறாய். ஆனால், சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடுகிறாய். அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆட வேண்டும். அப்போது சச்சின், தான் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் வேகத்தில் தான் அடி வாங்கியதாக கூறினார்.
அடுத்த மேட்ச் என்ன நடந்தது?
நீ களத்துக்கு சென்று அரைமணி நேரம் நில். அவர்களின் வேகம் உனக்கு பழகி விடும். அதன் பின் எளிதாக இருக்கும் என கூறி உள்ளார். இரண்டாவது போட்டியில் நேரத்தை பார்த்துக் கொண்டே அரை மணி நேரம் ஆடினார் சச்சின். அதன் பின் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து 59 ரன்கள் குவித்தார்.
சமாளித்த சச்சின்
அந்த தொடரில் சச்சின் இரண்டு அரைசதம் அடித்தார். 6 இன்னிங்க்ஸ்களில் 215 ரன்கள் சேர்த்தார். அந்த தொடரில் அதிக ரன் சேர்த்த இந்திய வீரர்களில் நான்காம் இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகையே வியக்க வைத்த சச்சினின் முதல் பேட்டிங் அனுபவம் இப்படித் தான் அதிர்ச்சிகரமாக இருந்தது.