24,000 பேர் உயிரிழப்பு
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 24,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் ஏறக்குறைய 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கை மத்தியஅரசு அமல்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளும் ஒரு ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
வீரர்கள், தங்களது பிட்னெசை பாதுகாக்கும்வகையில், பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு, அதன் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆட்டங்களில் காண முடியாத தங்களது விருப்பத்திற்குரிய வீரர்களின் இத்தகைய வீடியோக்களை கண்டு ரசிகர்கள் மனதை தேற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
பிவி சிந்து நிதியுதவி
சர்வதேச அளவில் மெஸ்ஸி, பெடரர் ஆகியோர் தங்களது நாட்டில் கொரோனா பாதித்தவர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். இதேபோல இந்தியாவிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர். பேட்மின்டன் விராங்கனை பிவி சிந்து தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
தோனி ரூ.1 லட்சம் நிதியுதவி
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் யூசுப் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் 4,000 முக கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தொண்டு நிறுவனம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். பஜ்ரங் புனியா மற்றும் ஹிமா தாஸ் போன்றவர்களும் தங்களது சம்பளத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் நிதியுதவி
இதனிடையே, முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். பல்வேறு தொண்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாயை பிரித்து நன்கொடையாக அளித்துள்ளார்.