ஹால் ஆஃப் பேம் பட்டியல்
ஒவ்வொரு ஆண்டும் ஹால் ஆஃப் பேம் பட்டியலை வெளியிட்டு கிரிக்கெட்டுக்கு சிறப்பாக சேவை புரிந்த ஓய்வு பெற்ற வீரர்களை கௌரவித்து வருகிறது ஐசிசி. இந்த ஆண்டு அந்தப் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்காவின் ஆலன் டொனால்டு மற்றும் ஆஸ்திரேலியாவின் கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகிய மூவரை இணைத்து கௌரவப்படுத்தி உள்ளது ஐசிசி.
சச்சினுக்கு கௌரவம்
சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஒரே கிரிக்கெட் வீரர் ஆவார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே வீரரும் அவரே. டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். மலைக்க வைக்கும் எராளமான சாதனைகள் செய்த சச்சினுக்கு உரிய கௌரவத்தை அளித்துள்ளது ஐசிசி.
ஆறாவது இந்தியர்
இந்திய அளவில், சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் என இதுவரை ஐந்து வீரர்கள் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆறாவது இந்தியராக சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாமதமாக கிடைக்கிறதா?
சிலர் சச்சினுக்கு முன் ராகுல் டிராவிட்டுக்கு எப்படி ஹால் ஆஃப் பேம் கௌரவம் அளிக்கப்பட்டது. சச்சினுக்கு மட்டும் ஏன் தாமதம்? என கேள்வி எழுப்புகிறார்கள். ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெற ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும்.
தாமதம் இல்லை
சச்சின் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். ஐந்து ஆண்டுகள் கழித்து வரும் 2019 ஹால் ஆஃப் பேம் பட்டியலில் சச்சின் பெயர் தாமதமின்றி சேர்க்கப்பட்டுள்ளது. எனவெம் இதில் தாமதமே இல்லை.
ஆலன் டொனால்டு பெருமிதம்
சச்சினுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆலன் டொனால்டு தென்னாப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அந்த நாட்டின் சார்பாக 300 டெஸ்ட் விக்கெட்கள், 200 ஒருநாள் போட்டி விக்கெட்கள் எடுத்த முதல் வீரர் அவர் தான். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.
கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக்
மகளிர் கிரிக்கெட்டை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக்கை ஹால் ஆஃப் பேம் பட்டியலில்சேர்த்துள்ளது ஐசிசி. இவர் சுமார் 16 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்தார். 180 ஒருநாள் போட்டி விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.