மலரும் நினைவுகள்
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலகக்கோப்பை வென்று 9 ஆண்டுகள் ஆகி உள்ளது. கடந்த ஏப்ரல் 2 அன்று ரசிகர்கள் 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூர்ந்து பல நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கால் இறுதிப் போட்டி
இந்த நிலையில், அந்த போட்டி தொடர்பாக சச்சினிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் அந்தப் போட்டியில் நடந்த அந்த சம்பவம் பற்றி கூறினார். 2011 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
அசையாமல் அமர்ந்தனர்
அந்த கால் இறுதிப் போட்டியில் சச்சின், சேவாக் இருவரும் ஆட்டமிழந்த பின் உடை மாற்றும் அறையில் அருகருகே அமர்ந்து அசையாமல் இருந்துள்ளனர். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இறுதி போட்டியிலும் அதே தான்
இறுதிப் போட்டியிலும் சச்சின், சேவாக் விரைவில் ஆட்டமிழந்தனர். இந்தியா 8 விக்கெட்களுடன் 275 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. அப்போதும் சச்சின். ஆஸ்திரேலியா போட்டி போலவே அசையாமல் இருந்துள்ளார். சேவாக்கையும் அதே போல அருகில் அமர வைத்துக் கொண்டார்.
சச்சின் என்ன சொன்னார்?
இந்த சம்பவம் பற்றி சச்சின் கூறுகையில், "கால் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, எங்கள் பார்ட்னர்ஷிப் முடிந்த உடன், நான் உடை மாற்றும் அறையில், பிஸியோதெரபிஸ்ட் மேஜையில் அமர்ந்து இருந்தேன். சேவாக் எனக்கு அருகில் இருந்தார். நாங்கள் அசையவில்லை" என்றார்.
நகரக் கூடாது
மேலும், "(இறுதிப் போட்டியில்) நான் அவுட் ஆன பின் உடை மாற்றும் அறைக்கு வந்தேன். அங்கே என் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். யதேச்சையாக சேவாக் இப்போதும் என் அருகில் இருந்தார். அவரை என் அருகில் அமருமாறு கூறி, நகரக் கூடாது என்றேன்." என்றார்.
சேவாக்கிடம் சச்சின் சொன்னது..
"ஆம், அப்படித்தான் கூறினேன். நீ இங்கே இருந்து நகரக் கூடாது என்றேன். ஏனெனில், கால் இறுதிப் போட்டியிலும் அது எங்களுக்கு நன்றாக வேலை செய்தது. நாங்கள் கால் இறுதிப் போட்டியிலும் எங்கள் பார்ட்னர்ஷிப் முடிந்த உடன் அதே தான் செய்தோம்" என்றார்.
நம்பிக்கைகள்
சச்சினுக்கு இது போன்ற நம்பிக்கைகள் அதிகம் உண்டு என பலர் கூற கேள்விப்பட்டதுண்டு. தற்போது அவரே அதை கூறியுள்ளார். அதிலும், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சச்சின் தன் நம்பிக்கைப் படி செயல்பட்டு இருக்கிறார்.
1983 உலகக்கோப்பையிலும்..
அதே சமயம், இந்திய அணியும் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதே போன்ற நம்பிக்கைகள் 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் சில இந்திய வீரர்கள் இடையே இருந்ததாக கூறப்படுவதுண்டு. இந்தியாவின் இரண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றியிலும் இது போன்ற நம்பிக்கைகள் இருந்துள்ளது ஆச்சரியம் தான்.