அரையிறுதி தோல்வி
இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி தவிர தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
யாரை சொல்கிறார் சச்சின்?
இந்திய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் குறித்து பேசிய சச்சின், "உண்மையில், எல்லோரும் அவர்கள் வேலையை சரியாக செய்தார்கள். ஆனால், என்னை தேர்வு செய்யச் சொன்னால் ரோஹித் சர்மா மற்றும் பும்ராவை தேர்வு செய்வேன். அவர்கள் இருவரும் அட்டகாசமாக ஆடினார்கள்." என்றார்.
ரோஹித் ரன் குவிப்பு
மேலும், "ரோஹித் தொடர் முழுவதும் அற்புதமாக ஆடினார். உலகக்கோப்பையில் அவர் ஐந்து சதங்கள் அடித்தார். அவரது பேட்டிங்கில் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவருக்கு அவரது விக்கெட்டின் மதிப்பு தெரிந்து இருந்தது" என்றார்.
ரோஹித் அதிரடி
உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 648 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அரையிறுதிப் போட்டியில் வெறும் 1 ரன் எடுத்து முதல் ஆளாக ஆட்டமிழந்தார். அது மட்டுமே அவரது மிக மோசமான செயல்பாடாக அமைந்தது.
பும்ரா எப்படி?
"பும்ரா தொடர் முழுவதும் மிரட்டலாக செயல்பட்டார். யாரும் அவரை மீறி ஆடி விடவில்லை" என்றார். பும்ரா உலகக்கோப்பை தொடரில் 18 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். துவக்கம் மற்றும் இறுதி ஓவர்களில் தொடர்ந்து கட்டுக் கோப்பாக பந்து வீசி அசத்தினார்.