கடந்த ஆண்டில் ஓய்வு
இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். கடந்த ஐபிஎல் 2020 போட்டிகளிலும் பங்கேற்காமல் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுத்தார். தற்போது சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடவுள்ளார்.
வாழ்க்கையை மாற்றிய ஆலோசனை
இந்நிலையில், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறிய அறிவுரை தன்னுடைய வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக மாற்றியது என்பது குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார். முதலில் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், தன்னால் அதிசயங்களை படைக்க முடியும் என்று நம்ப வேண்டும் என்றும் சச்சின் அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை
இந்த அறிவுரை தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றியதாகவும், அதே நாளின் மாலையில் தன்னுடைய பைசெப்சில் தான் நம்பிக்கை என்ற வார்த்தையை டாட்டூவாக பதிவிட்டதாகவும் சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டெண்டுல்கர் தனது 100வது சதத்தை வங்கதேசத்திற்கு எதிராக பூர்த்தி செய்தபோது அவருடன் சுரேஷ் ரெய்னா மைதானத்தில் விளையாடினார்.
உத்தரபிரதேச அணிக்காக விளையாட்டு
வரும் 10ம் தேதி முதல் சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 தொடர் துவங்கவுள்ளது. இதையொட்டி அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தரபிரதேச அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்று விளையாடவுள்ளார். இளம் வீரர் பிரியம் கர்க் தலைமையில் அவர் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.