காஷ்மீர் விவகாரம்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆன ஷாஹித் அப்ரிடி ஓய்வு பெற்றது முதல் காஷ்மீர் விவகாரம் பற்றி அவ்வப்போது பேசி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார். முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீருடன் அவர் சமூக வலைதளத்தில் மோதி வந்தார்.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங்
கொரோனா வைரஸ் பரவிய சமயத்தில் அவர் பாகிஸ்தானில் பலருக்கு உதவி செய்து வந்தார். இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங்கை ரசிகர்களை நிதி அளிக்குமாறு கேட்குமாறு கோரினார். அவர்களும் அது தொடர்பாக வீடியோ வெளியிட்டனர்.
எந்த தொடர்பும் இனி இல்லை
எனினும், பின்னர் அப்ரிடி காஷ்மீர் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதைத் தொடர்ந்து யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் அவருடன் எந்த தொடர்பும் இனி இல்லை என விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்திய வீரர்கள் மன்னிப்பு
அதன் பின்னும் ஹாஹித் அப்ரிடி சர்ச்சைக்குரிய வகையில் தான் பேசி வருகிறார். சில நாட்கள் முன் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை பல முறை வீழ்த்தியதால், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியிடம் தங்களை மன்னிக்குமாறு கேட்பார்கள் என கூறி இருந்தார்.
சச்சின் டெண்டுல்கர்
அந்த பேச்சு சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து தற்போது சச்சின் டெண்டுல்கர் குறித்து பேசி சீண்டி உள்ளார் அப்ரிடி. சச்சின் டெண்டுல்கர், சோயப் அக்தரின் பந்துவீச்சை கண்டு நடுங்கியதாகவும், ஆனால், அவர் ஒப்புக் கொள்ள மாட்டார் எனவும் கூறி உள்ளார்.
சோயப் அக்தர் என்ன சொன்னார்?
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான சோயப் அக்தரின் சுய சரிதைப் புத்தகத்தில் சச்சின் டெண்டுல்கர் தன் வேகமான பந்துவீச்சை கண்டு ஒரு முறை பயந்ததாக குறிப்பிட்டு இருந்தார். அது அப்போது சர்ச்சை ஆனது. அப்போது ஷாஹித் அப்ரிடி அது உண்மைதான் என கூறி இருந்தார்.
பழைய சர்ச்சை
தற்போது அந்த 9 ஆண்டு பழைய சர்ச்சையை மீண்டும் கிளறி விட்டுள்ளார் அப்ரிடி. ஒரு பேட்டி ஒன்றில், "சச்சின் தான் பயந்ததாக ஒப்புக் கொள்ள மாட்டார். சோயப் அக்தரின் சில பந்துவீச்சு ஸ்பெல்களில் சச்சின் மட்டுமல்ல, உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட நடுங்கி இருக்கிறார்கள்" என்றார்.
புரிந்து கொள்ள முடியும்
மேலும், "மிட்-ஆஃப் அல்லது கவர் பகுதியில் பீல்டிங் செய்யும் போது அதை நம்மால் பார்க்க முடியும். ஒரு வீரரின் உடல் மொழியை பார்க்க முடியும். அங்கே இருந்து பேட்ஸ்மேன் அழுத்தத்தில் இருக்கிறார், இயல்பாக இல்லை என நம்மால் புரிந்து கொள்ள முடியும்" என்றார் அப்ரிடி.
அதிருப்தி
அப்ரிடியின் இந்தப் பேச்சு இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. சோயப் அக்தர் பந்துவீச்சில் சச்சின் ரன் குவித்ததை பலரும் நினைவு கூர்ந்து அப்ரிடிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் அக்தருக்கு எதிராக சச்சினின் சராசரி 45 என்பது குறிப்பிடத்தக்கது.