ஜார்ஜ் பிளாயிட் படுகொலை
ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின அமெரிக்கரை காவல்துறை அதிகாரி ஒருவர் தன் காலால் கழுத்தை நெறித்து கொன்றார். தன்னால் மூச்சு விட முடியவில்லை என அவர் திணறி, திணறிக் கூறியும் கூட அந்த அதிகாரி இரக்கமே இல்லாமல் நடந்து கொண்டார்.
ஒரு சிறு உதாரணம் தான்
ஜார்ஜ் பிளாயிட்டின் மரணம் கருப்பினத்தவர்களுக்கு எதிராக தினமும் நடந்து வரும் கொடுமைகளின் ஒரு சிறு உதாரணம் தான். இதுவரை அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிக்காட்டி தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கருப்பினத்தவர் உலகம் முழுவதும் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
ஆதரவு
அதற்கு ஆதரவாக பல பிரபலங்களும் களத்தில் குதித்துள்ளனர். விளையாட்டுத் துறையில் இன ரீதியான பாகுபாடு இருப்பதாக காலம் காலமாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் விளையாட்டுத் துறையை சேர்ந்த பல அமைப்புகளும், அணிகளும் தாங்கள் இன வேற்றுமை பார்ப்பதில்லை என அந்த போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
பொங்கி எழுந்த டேரன் பிராவோ
சர்வதேச கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் ஐசிசி இது தொடர்பாக முதலில் அமைதி காத்த நிலையில், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் பிராவோ, ஐசிசி மற்றும் பிற நாட்டு கிரிக்கெட் அமைப்புக்கள் இன பாகுபாடுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என பொங்கி எழுந்தார்.
ஐசிசி வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில், ஐசிசி கிரிக்கெட்டில் நிலவி வரும் இன ஒற்றுமையை சுட்டிக் காட்டி ஒரு வீடியோ வெளியிட்டது. 2019 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிமிடத்தை வெளியிட்டு இருந்தது.
வெற்றி தருணம்
இங்கிலாந்து அணியில் பல்வேறு இனத்தை சேர்ந்த வீரர்கள் ஒன்றாக அந்த உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய தருணத்தை பகிர்ந்து இருந்தது. அத்துடன் ரசிகர்களிலும் பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் வெற்றிக்காக காத்திருந்த தருணங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.
பன்முகத்தன்மை
அந்த பதிவில் ஐசிசி, "பன்முகத்தன்மை இல்லாமல் கிரிக்கெட் இல்லை. பன்முகத்தன்மை இல்லாமல் முழுவதையும் உங்களால் காண முடியாது" என கூறி கிரிக்கெட்டில் பல இனத்தை சேர்ந்த வீரர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக ஆடி வருவதை கூறி இருந்தது.
Recommended Video
நெல்சன் மண்டேலா கூற்று
அந்த பதிவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், "நெல்சன் மண்டேலா ஒருமுறை கூறினார். "விளையாட்டு இந்த உலகத்தை மாற்றும் தன்மை கொண்டது. அது வேறு எதையும் விட எளிதாக இந்த உலகத்தை ஒன்றிணைக்கும் சக்தியை கொண்டது" விவேகமான வார்த்தைகள்" என கூறி இருந்தார்.