நெருங்கிப் பழகினார்
தோனி படத்தில் நடிப்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருந்தார் சுஷாந்த். தோனியுடன் நெருங்கிப் பழகினார். அவரது நடை உடை பாவனை, சிரிப்பு, பேட்டிங் ஸ்டைல், நிற்பது நடப்பது என எல்லாவற்றையும் ரொம்ப நுணுக்கமாக கவனித்து அப்சர்வ் செய்து பிறகே நடிக்கப் போனார். அதனால்தான் நிஜ தோனியைப் படத்தில் பார்த்தது போலவே அனைவருக்கும் உணர்வு ஏற்பட்டது. படம் வெற்றி பெற இதுவும் முக்கியக் காரணம்.
கிரண் மோர் பயிற்சி
கிரண் மோர்தான் சுஷாந்த்துக்குப் பயிற்சி கொடுத்தவர். அவர்தான் ரீல் தோனியை செதுக்கிய சிற்பி. கிட்டத்தட்ட 9 மாதங்கள் இதற்காக தீவிரப் பயிற்சி கொடுத்தார் கிரண் மோர். அவர் கொடுத்ததை விட, அவரிடமிருந்து சுஷாந்த் எடுத்துக் கொண்டது அதிகம். அதுதான் தோனியாக அவர் திரையில் வாழ முக்கியக் காரணமே. இதைச் சொல்லித்தான் தனது சோகத்தை வெளிப்படுத்தியிருந்தார் கிரண் மோர்.
தீவிர ஆர்வம்
குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க அவர் காட்டிய அக்கறையும் ஆர்வமும் பாராட்டுக்குரியதாக இருந்தது என்று கிரண் மோர் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கரையும் கூட அப்படித்தான் கவர்ந்திருந்தார் சுஷாந்த். தனது சிறந்த நடிப்புக்காக மட்டுமல்லாமல் கிரிக்கெட் திறமைக்காகவும் சச்சினின் பாராட்டுக்களைப் பெற்றார் சுஷாந்த். மைதானத்தில் சுஷாந்த் பேட் செய்வதைப் பார்க்க ஒரு நாள் சச்சின் வந்துள்ளார். அவரது பேட்டிங்கைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் சச்சின்.
சச்சின் ஆச்சரியம்
யார் இவர், இவ்வளவு நன்றாக பேட் செய்கிறாரே.. இவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கே தகுதியானவர் என்று ஆச்சரியப்பட்டுக் கூறினாராம். குறிப்பாக சுஷாந்த் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த விதம்தான் சச்சினை ஆச்சரியப்படுத்தி விட்டதாம். நிஜமான கிரிக்கெட் வீரர்களே சிரமப்படும் ஷாட் இது. தோனியைப் போலவே அச்சு அசலாக எப்படி இவர் அடித்தார் என்பதுதான் சச்சினின் ஆச்சரியம். அதுதான் சுஷாந்த் மீதான அவரது அபிமானத்தை அதிகரித்து விட்டதாம். இதனால்தான் சுஷாந்த்தின் இந்த இளவயது மரணம் சச்சினையும் ரொம்ப வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
என்ன சொல்வது.. சத்தமில்லாமல் போய் விட்டார் சுஷாந்த்.. இப்போது நாடே அவரைப் பற்றி சிலாகித்துக் கொண்டுள்ளது.