இன்று இறுதிப் போட்டி
தென்னாப்பிரிக்காவில் கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் ஐசிசி அன்டர் -19 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை ஓடவிட்டு இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதேபோல நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வெற்றிகொண்டு வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதல் டைட்டிலை வெல்ல வங்கதேசம் முனைப்பு
அன்டர் 19 உலக கோப்பையை இதுவரை 4 முறை வெற்றிக் கொண்டுள்ள இந்திய அணி ஐந்தாவது டைட்டிலை வெற்றி கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வங்கதேசமும் இந்தப் போட்டியில் வெற்றி கொண்டு, கோப்பையை தங்களது நாட்டிற்கு எடுத்துச் செல்ல முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரில் அபார விளையாட்டு
பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அன்டர் 19 அணி வீரர்கள், இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அசத்தினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா, பிரியம் கார்க் போன்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த இதேபோல பந்துவீச்சாளர்கள் சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங் மற்றும் ரவி பிஸ்னோய் போன்றவர்களும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை கொடுத்தனர்.
10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுடன் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அந்த அணியை சேஸ் செய்த இந்திய அணியின் யஷஸ்வி அகர்வால் சதமடிக்க, உடன் விளையாடிய திவ்யான்ஷ் சக்சேனா அரைசதம் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று சாதனை புரிய உதவினர். இதையடுத்து பதக்கக் கனவுடன் ஆடிய பாகிஸ்தான் தங்களது நாட்டிற்கு டிக்கெட் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
|
கோப்பையை பரிசளிக்க வேண்டுகோள்
இந்நிலையில் அன்டர் 19 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை விளையாடி கோப்பையை வெற்றி கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர் இந்திய இளம் வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.